This Article is From May 02, 2020

கொரோனாவை கட்டுப்படுத்த சென்னைக்கு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். நியமனம்

சென்னையில் நேற்று மட்டும் 176 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு மொத்த எண்ணிக்கை 1,082 ஆக உயர்ந்திருக்கிறது. ஒட்டுமொத்த தமிழக அளவில் 2,323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சூழலில் சென்னைக்கு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார். 

2004-ல் சுனாமி ஏற்பட்டபோது தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்தார். சுனாமி பாதிப்பின் தீவிரத்தை உணர்ந்த தமிழக அரசு அவரை அதிரடியாக நாகை மாவட்ட ஆட்சியமாக மாற்றியது.

Chennai:

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்திலேயே அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் துறை ஆணையர் ராதா கிருஷ்ணன் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

சென்னையில் நேற்று மட்டும் 176 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு மொத்த எண்ணிக்கை 1,082 ஆக உயர்ந்திருக்கிறது. ஒட்டுமொத்த தமிழக அளவில் 2,323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சூழலில் சென்னைக்கு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார். 

அவருக்கு உதவியாக 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளைக் கொண்ட குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் வடக்கு மண்டல அதிகாரி மகேஷ் குமார் அகர்வால், கிழக்கு மண்டல அதிகாரி அபேஷ் குமார், தெற்கு மண்டல அதிகாரி அமரேஷ் புஜாரி, மேற்கு மண்டல அதிகாரி அபே குமார் சிங், புறநகர் போலீஸ் அதிகாரி பவானீஸ்வரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், 16 ஆயிரம் பணியாளர்கள் தமிகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பாதிப்பு அதிகரிப்பதற்கு முன்பாக சுமார் 8 ஆயிரம் பேர் வெளிநாட்டில் இருந்து திரும்பியுள்ளனர். அவர்களை சரிவர பரிசோதிக்கவில்லை என்ற விமர்சனங்களை எழுவதை பார்க்க முடிகிறது.

தற்போது சென்னைக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். முன்பு பல சிக்கலான பணிகளை வெற்றிகரமாக முடித்தவர். 1992-ம் பிரிவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவர், 2004-ல் சுனாமி ஏற்பட்டபோது தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்தார். சுனாமி பாதிப்பின் தீவிரத்தை உணர்ந்த தமிழக அரசு அவரை அதிரடியாக நாகை மாவட்ட ஆட்சியமாக மாற்றியது. 

சுனாமியால் நாகையில் 6 ஆயிரம்பேர் உயிரிழந்தபோதிலும், ராதாகிருஷ்ணனின் சிறப்பான நடவடிக்கையால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. 

அதன்பின்னர் தமிழக சுகாதாரத்துறையில் 7 ஆண்டுகள் முதன்மைச் செயலாக பணியாற்றினார். சமீபத்தில் அவருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது.

தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ராதாகிருஷ்ணனின் தேவையை உணர்ந்த தமிழக அரசு அவரை சிறப்பு அதிகாரியாக சென்னைக்கு நியமித்துள்ளது. 


 

.