Read in English
This Article is From Apr 08, 2019

8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது: உயர்நீதிமன்றம் அதிரடி!

சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

Advertisement
தமிழ்நாடு Written by

சென்னை - சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்தை கொண்டுவருவதாக தமிழக அரசு அறிவித்தது. இதற்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1,900 ஹெக்டர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

தொடர்ந்து, பல பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், விவசாயிகளும், நில உரிமையாளர்களும் பரவலாக இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடைவிதிக்க கோரியும், திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் பல கட்டங்களாக போராட்டங்களும் நடத்தி வந்தனர்.

எனினும், மத்திய அரசு துணையுடன், தமிழக அரசு 8 வழிச்சாலை திட்டத்தை கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வந்தது. இதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளும், நில உரிமையாளர்களும் தர்மபுரி எம்.பி அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் சுந்தர் ராஜன் உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

Advertisement

மேலும், அதில் இந்த திட்டத்தை எதிர்த்தவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்யவும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்ததது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், இரண்டு மாதங்களுக்கு முன்பாக தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை, நிலம் கையகப்படுத்தப்பட்டது செல்லாது என்று நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பளித்தனர்.

Advertisement

மேலும், இந்த திட்டத்தின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இதேபோல், வருவாய் ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை, 8 வாரத்தில் பழைய நிலைக்கு கொண்டு வந்து சம்மந்தப்பட்ட விவசாயிகளிடம் நிலத்தை வழங்க வேண்டும். மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற்றபின் தான் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

Advertisement