Tamilnadu Weatherman Update- தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் நாள் முழுவதும் நல்ல மழை பெய்து வரும் நிலையில், தலைநகர் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இரவும் அதிகாலையிலும் மழை கொட்டுகிறது. பின்னர் பகல் முழுவதும் சுளீரென்று வெயில் அடிக்கிறது.
இது குறித்து பிரபல வானிலை கணிப்பாளர், தமிழ்நாடு வெதர்மேன், பிரதீப் ஜான், “நேற்றிரவு தென் சென்னையில் மழை கொட்டியது. இரவு நேரம்தான் சென்னை மழைக்கு ஏற்ற நேரமாக அமைந்துள்ளது. இடைவெளி விட்டுவிட்டு இந்த மழை தொடரும்.
இன்று காலை 8 மணி ஆகியதைத் தொடரந்து மழை நின்றது. மீண்டும் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் இரவு நேரத்தில் மழை தொடங்கும். காலை வரை அது நீடிக்கும். அதுவரை சுளீரென்று வெயில்தான் அடிக்கும். அதே நேரத்தில் மேற்கு சென்னையில் பகலான பிறகும் மழை கொட்டித் தீர்த்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 37 மில்லி மீட்டர் மழை பெய்தது. அதைத் தொடர்ந்து தரமணியில் 36 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.