Chennai Weather: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை முதல் சென்னையில் இடியுடன் கூடிய மழை பொழிந்து வருகிறது. இதையடுத்து, இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம், ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, இன்று முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். அதே நேரத்தில் லேசான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்’ என்று தெரிவித்துள்ளது.
மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன், தனது முகநூல் பக்கத்தில், ‘தற்போது இருக்கும் வானிலைப்படி, அடுத்த சில நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். குறிப்பாக, நள்ளிரவு ஆரம்பிக்கும் மழை காலை வரை பொழியும். சென்னை (Weather in Chennai), புதுச்சேரி, கடலூர், திருவாரூர் போன்ற கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். நாளின் நடுப்பகுதியில் உள் மாவட்டங்களில் மழை பொழிவு ஏற்படும்’ என்று பதிவிட்டுள்ளார்.