சென்னையில் ரிச்சி தெருவில் ஆட்டோவில் பயணித்த பெண் மற்றும் அவரது மகன் மீது நாட்டு வெடிகுண்டை வீசி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில் காயம்பட்ட மலர் என்ற பெண் தோளில் காயத்துடன் உதவி கேட்டு மன்றாடுவதை காண முடிகிறது. “யாராவது என்னைக் காப்பாற்றுங்கள் நான் நீதிமன்றத்திலிருந்து வருகிறேன். யாரோ என் மீது வெடிகுண்டை எறிந்தனர்” என்று ஒரு வழக்கறிஞரான அந்த பெண் வீடியோவில் கூறுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங்க் கலந்து கொள்ளும் மாநாட்டிற்கு முன் நடந்த இந்த தாக்குதல் பதற்றத்தை தூண்டியுள்ளது.
சென்னையின் மையப்பகுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காயமடைந்த பெண்ணும் அவரது மகனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல ஆண்டுகளுக்கு முன் ஒரு கும்பலால் கொல்லப்பட்ட தோட்டம் சேகரின் மூன்றாவது மனைவி மலர் என்பதால் இது ஒரு பழிவாங்கும் முயற்சியென காவல்துறை சந்தேகிக்கின்றனர்.
“இந்த சம்பவத்திற்கு பின் கும்பலின் பழிவாங்கும் முயற்சி இருப்பதாக சந்தேகிக்கிறோம். வெங்காய பட்டாசு போன்றவற்றை பயன்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை செய்யப்படும்” என்று மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.