This Article is From Jan 25, 2019

புதிய உச்ச நீதிமன்ற அமர்வின் கீழ் அயோத்தியா வழக்கு..!

வரும் செவ்வாய் கிழமை அயோத்தியா வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது

கடந்த ஜனவரி 11 ஆம் தேதி அயோத்தியா வழக்கு கடைசியாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

New Delhi:

அயோத்தியா விவகாரம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 5 பேர் அமர்வு கொண்ட நீதிபதிகள் தலைமையில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க, புதிதாக 2 நீதிபதிகளை அமர்வில் சேர்த்துள்ளார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய். 

கடந்த ஜனவரி 11 ஆம் தேதி அயோத்தியா வழக்கு கடைசியாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, நீதிபதி யூ.யூ.லலித், ‘இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் நான் முன்னர் ஆஜராகியுள்ளேன். எனவே, என்னால் இந்த வழக்கில் நீதிபதியாக இருக்க முடியாது' என்று கூறிவிட்டார். 

இதையடுத்து நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் அஷோக் பூஷண் ஆகியோர் 5 பேர் கொண்ட அமர்வில் புதியதாக இணைக்கப்பட்டுள்ளனர். அயோத்தியா விவகாரம் முன்னர் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா தலைமையில் விசாரிக்கப்பட்ட போது, இந்த இரண்டு நீதிபதிகளும் அமர்வில் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வரும் செவ்வாய் கிழமை அயோத்தியா வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. இந்த வழக்கை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளை சேர்த்து தலைமை நீதிபதி கோகாய் மற்றும் நீதிபதிகள் சந்திராச்சூத், போப்டே ஆகியோர் விசாரணை செய்வார்கள். 

1992 ஆம் ஆண்டு அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அப்போதிலிருந்து அங்கு ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலதுசாரி அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு முன்னர் கீழ்நிலை நீதிமன்றங்களில் இந்த விவகாரம் தொடர்பாக தீர்ப்பளிக்கப்பட்ட போதும், உச்ச நீதிமன்றத்தில் இறுதிகட்ட விசாரணை தற்போது நடந்து வருகிறது. 

லோக்சபா தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் ஆளும் பாஜக-வின் கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் வலதுசாரி அமைப்புகளும், மத்திய அரசு சிறப்பு அவசரச் சட்டம் கொண்டு வந்து ராமர் கோயில் கட்டுமானப் பணியைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. 

கடந்த ஆண்டு அரசு தரப்பு, வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தது. அதை நிராகரித்த நீதிமன்றம் இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் வழக்கு விசாரணையை கையில் எடுத்தது. 

வழக்கு தொடர்பான விசாரணை சீக்கிரம் நடத்தப்பட வேண்டும் என்று பாஜக நினைப்பதற்குக் காரணம், லோக்சபா தேர்தலின் நெருக்கம்தான். அப்படிச் செய்வதன் மூலம், தேர்தலுக்கு முன்னரே கோயிலை எழுப்பி இந்து சமூகத்தினரின் ஓட்டுகளைப் பெறலாம் என்று பாஜக திட்டமிடுகிறது. 

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘ராமர் கோயில் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அங்கு சொல்லப்படும் தீர்ப்பை அடுத்துத்தான் அரசு தனது நடவடிக்கையை எடுக்கும்' என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

.