நீதிபதி சரத் அரவிந்த் போப்டேவை அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரைக்குமாறு இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக் காலம் வரும் நவம்பர் 17-ஆம் தேதியோடு முடிவடைகிறது. அதற்கு முன்னர் அயோத்தி வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், அதன் தீர்ப்பை வழங்கிவிட்டு ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நவம்பர் 18-ஆம் தேதி பதவியேற்கலாம் என்றும் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி அப்பதவியில் நீடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கின் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இதனால் தீர்ப்பு குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த இடம் ராமர் பிறந்த இடம் என்று ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட வலதுசாரி அமைப்பினர் நம்பி வருகின்றனர். இந்த இடத்தில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
மொத்தம் 2.77 ஏக்கர் நிலத்திற்குத்தான் சுமார் 28 ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. இந்த வழக்கை முதலில் விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் தனது தீர்ப்பை வழங்கியது. இதன்படி, வழக்குத் தொடர்ந்த வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகள் நிலத்தை சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
இதனை ஏற்க மறுத்து உச்ச நீதிமன்றத்தில் 14 பேர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. பிரச்சையை சமரசம் மூலம் தீர்த்து வைக்க உச்ச நீதிமன்றம் முயற்சி மேற்கொண்டது. இருப்பினும் இந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இதையடுத்து தினசரி வாக்கு விசாரணையாக கடந்த ஆகஸ்ட் 6-ம்தேதி முதல் அயோத்தி வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 40 நாட்கள் விசாரணை நடைபெற்று வாதங்களை முடித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ரஞ்சன் கோகாய் பதவிக் காலம் முடிவதற்கு முன்பாக இந்த வழக்கில் தீர்ப்பு வரும் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.