வன்முறையை நிறுத்தினால் மட்டுமே குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு இடங்களில் போராட்டகளத்தில் வன்முறையும் வெடித்தது. மத்திய அரசின் இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
ஆனால் இந்த வழக்குகள் எப்பொழுது விசாரிக்கப்படும் என்பது தொடர்பாக தெளிவான விவரத்தை இதுவரை உச்சநீதிமன்றம் குறிப்பிடவில்லை. எனவே இந்த வழக்குகள் எப்போது விசாரிப்பீர்கள் என்று சில வழக்கறிஞர்கள் இன்றைய தினம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பாக, கோரிக்கை விடுத்தனர்.
அச்சமயம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான எஸ்.ஏ.பாப்டே, நாடு முழுவதும் நடைபெற்று வரக்கூடிய இந்த போராட்டம் மற்றும் வன்முறை நிறுத்தப்பட்டால் மட்டுமே தாங்கள் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க முடியும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி நாடு முழுவதும் நடைபெற்று வரும் இந்த சம்பவங்கள் கடுமையான சூழலை நிலவுவதை எங்களால் உணர முடிகின்றது. எனவே நாங்கள் இந்த வழக்கை எடுத்து விசாரிப்பதன் மூலம் அமைதி திரும்ப வேண்டும் என எண்ணக்கூடிய விஷயமாக இருக்கிறது. ஆனால் இப்போதைய சூழ்நிலையில், அவ்வாறான அமைதி திரும்பும் என்பதை எங்களால் உறுதியாக நினைக்க முடியவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த வன்முறைகள் மற்றும் சட்டத்திற்கு எதிராக தீவிரமாக நடைபெற்று வரக்கூடிய போராட்டங்கள் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டால் மட்டுமே தாங்கள் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க முடியும் என திட்டவட்டமாக கூறியுள்ளனர்.