ஆந்திர பிரதேச ஆனந்த்பூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு, எதிர்பாராத விதமாக ஜியன்ட் வீல் நழுவி விழுந்ததால் 10 வயதுடைய பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த விபத்தில் 6 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதில் 3 குழந்தைகளும் அடங்குவர்.
ஆனந்த்பூர் பகுதியில் நடந்த பொருட்காட்சியில், ஜியன்ட் வீல் பொருத்தப்பட்டிருந்த சட்டகத்தில் ஒரு போல்ட் கழண்டதால், வீல் நழுவியுள்ளது. இந்த ஜியன்ட் வீல்-ல் அப்போது பல குழந்தைகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்பாராத இந்த விபத்தால், ஜியன்ட் வீல் பொருத்தப்பட்டிருந்த உயரத்தில் இருந்து வேகமாக கீழே விழுந்தது. அங்கு கூடி இருந்தவர்கள் பலரும் இந்த கோர விபத்தை நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். உயரத்திலிருந்து, ஜியன்ட் வீல் வேகமாக கீழே விழுந்த காரணத்தால் அம்ருதா என்ற குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
ஆனந்த்பூரில் இருக்கும் ஜூனியர் கல்லூரியில் இந்த பொருட்காட்சி போடப்பட்டு இருந்தது. கோடைக்கால விடுமுறை என்பதாலும் வார விடுமுறை நாள் என்பதாலும் பொருட்காட்சிக்கு பலத்த கூட்டம் வந்திருந்தது. இந்த விபத்தில் காயம் ஏற்பட்டவர்கள் ஆனந்த்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்தவர்கள், ஜியன்ட் வீல்-ஐ ஆபரேட் செய்து கொண்டிருந்தவர் மது அருந்தியிருந்ததாக குற்றம் சாட்டுகின்றனர். ஜியன்ட் வீல்-ல் போல்ட் தளர்வாக உள்ளதை அங்கு கூடி இருந்தவர்கள் பார்த்ததாகவும், அது குறித்து வீல் ஆபரேட்டருக்கு எச்சரிக்கை ஊட்டியதாகவும் கூறுகின்றனர். ஆனால், ஆபரேட்டர் மது அருந்தியிருந்ததால் எச்சரிக்கை எதையும் பொருட்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆபரேட்டரை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்து உள்ளனர் மக்கள். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.