This Article is From Jun 01, 2020

‘இந்தியாவுடனான எல்லையில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது’ – சீனா தகவல்

எல்லை பிரச்னையில் இந்தியாவின் கண்ணியத்திற்கு பாதிப்பு ஏற்படுவதை மத்திய அரசு அனுமதிக்காது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கையில் சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். 

‘இந்தியாவுடனான எல்லையில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது’ – சீனா தகவல்

அமெரிக்க அதிபரின் கோரிக்கையை இந்தியாவும், சீனாவும் நிராகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Beijing:

இந்தியாவுடனான எல்லையில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. லடாக் எல்லையில் சீனா பிரச்னை செய்து வரும் நிலையில், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அந்நாடு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சின வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாகோ லிஜியான் கூறியதாவது-

இரு நாடுகளின் தலைவர்கள் இடையே கருத்தொற்றுமை ஏற்படுவதற்கு சீனா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. நாங்கள் சீனாவின் இறையாண்மை, பாதுகாப்பு உள்ளிட்டவற்றை காக்கவும், எல்லையில் பிரச்னை ஏதும் ஏற்படாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது எல்லையில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பேச்சுவார்த்தை மூலமாக இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் எல்லை பிரச்னை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். எல்லை பிரச்னையில் இந்தியாவின் கண்ணியத்திற்கு பாதிப்பு ஏற்படுவதை மத்திய அரசு அனுமதிக்காது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கையில் சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். 

கடந்த புதன்கிழமையன்று இந்தியாவுடனான எல்லை பிரச்னையை சுமுகமாக தீர்க்கப் போகிறோம் என்று சீனா கூறியிருந்தது. அதற்கு முன்பாக இந்தியா - சீனா பிரச்னையை தீர்க்க மத்தியஸ்தமோ அல்லது தூதராக செயல்படவோ தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

அமெரிக்க அதிபரின் கோரிக்கையை இந்தியாவும், சீனாவும் நிராகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

லடாக் மற்றும் சிக்கிமில் இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்னை ஏற்பட்டுள்ளது.. மே 5 ஆம் தேதி, பாங்கோங் - த்சோ ஏரி பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் மோதினர். இதன் தொடர்ச்சியாக, இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் மே 9 அன்று சிக்கிமில் உள்ள நாகு லா பாஸ் அருகே நேருக்கு நேர் மோதலில் ஈடுபட்டனர். இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான பதட்டம் அதிகரித்துள்ளது.

2017 -ல், டோக்லாம் சந்திப்பில் இந்தியா மற்றும் சீனாவின் துருப்புக்கள் 73 நாள்கள் நிறுத்தப்பட்டு சிறிய அளவிலான போரை ஏற்படுத்துவது போன்று தோற்றம் அளித்தன.

.