சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 830ஆக உயர்ந்துள்ளது என சீன அரசு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, முதன்முதலில் கொரோனா கண்டறியப்பட்ட மத்திய நகரமான வுஹானில் வைரஸ் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள 1,072 பேரையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு நிலைமையை உலகளாவிய சுகாதார அவசரநிலை என்று அறிவிப்பதை நிறுத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த வைரஸை கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக வுஹான் உட்பட ஐந்து நகரங்களை சீனா நேற்று முடக்கியுள்ளது. அந்த பகுதிகளுக்கான அனைத்து போக்குவரத்து சேவையையும் முற்றிலும் முடக்கியுள்ளது. இதன்மூலம் 2 கோடி மக்களை சீன அரசு தனிமைப்படுத்தியுள்ளது.
இந்த வாரம் புத்தாண்டு விடுமுறை காரணமாக நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்ய தொடங்கியதால், அதனை பரவலாக தடுக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தொழில்துறை மற்றும் போக்குவரத்து மையமான வுஹானில் உள்ள வீதிகள் மற்றும் ஷாப்பிங் மையங்கள் இப்போது வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும் குடியிருப்புவாசிகள் நகரத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் மட்டும் 8 பேர் இந்த வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளதாகவும், மேலும் நாடு முழுவதும் புதிதாக வைரஸ் பாதிப்புக்கு 259 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட 830 பேரில் 177 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில், 34 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் இருந்து வீடி திரும்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.