சீனாவின் கியாங் என்ற நகரத்தில் 108 மீட்டர் உயர வர்த்தகக் கட்டிடம் ஒன்று சமூக வலைத்தளங்களில் கலாய்ப்பதற்கு சிக்கியுள்ளது. அலுவலகங்கள், ஷாப்பிங்க் மால், சொகுசு ஹோட்டல் என்று இருக்கும் அந்த கட்டிடத்தை லூடி என்ற நிறுவனம் கட்டியுள்ளது. இந்த கட்டிடத்துக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், கட்டிடத்தின் கடைசி மாடியில் இருந்து நீர் வீழ்ச்சி விழுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நீர் வீழ்ச்சி என்று பெருமையாக அந்நிறுவனம் கூறி வருகிறது. ஆனால், நெட்டிசன்கள் அதை நகைப்புக்குள்ளாக்கியுள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே கட்டி முடிக்கப்பட்ட அந்த கட்டிடத்தில், இதுவரை 6 முறை மட்டுமே அந்த நீர் வீழ்ச்சி இயக்கப் பட்டிருக்கிறது. இதுவே நகைப்புக்குள்ளான காரணமும் கூட. ஏனெனில், ஒரு மணி நேரம் இந்த நீர் வீழ்ச்சியை மோட்டார் மூலம் இயக்க 120 டாலர்கள் செலவாகின்றனவாம். நீரை கீழே இருந்து மேலே மோட்டார் மூலம் ஏற்றவே இந்த செலவு.
கீழே கொட்டும் தண்ணீர் மற்றும் மழை நீர், ஒரு டாங்கில் சேமிக்கப்படுகிறது. இதனால் இந்த நகரின் நிலத்தடி நீர் வளம் அதிகரிக்கும் என்று சீரியஸாக அந்நிறுவனம் பேசினாலும், “ மாதம் ஒரு முறை கண்ணாடியை துடைக்க இந்த நீர் வீழ்ச்சியை பயன்படுத்தலாம்” என்று கலாய்த்த படி இருக்கிறார்கள் நெட்டிசன்கள்.