குடியுரிமை (திருத்தம்) மசோதா அல்லது Citizenship (Amendment) Bill-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. இந்த மசோதா மூலம், பாகிஸ்தான், வங்கதேசம், அப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படும். சென்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது இந்த மசோதா, ஒப்புதல் பெறாத நிலையில், மீண்டும் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படலாம்.
இது குறித்து முக்கிய 10 தகவல்கள்:
1.அண்டை நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், கிருத்துவர்கள், சீக்கியர்கள், ஜெயினர்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பார்சிக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இந்த மசோதா வழி செய்கிறது.
2.முஸ்லிம்களுக்கு இந்த மசோதா மூலம் குடியுரிமை கிடைக்காது என்பதால், இதை எதிர்க்கட்சிகள், மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று விமர்சனம் செய்துள்ளன.
3.இந்த மசோதா, சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்களுக்கும் மற்ற நாடுகளில் மதத்தின் பெயரால் துன்புறுத்தப்பட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தவர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை வரையறுக்கும் என்று சொல்லப்படுகிறது.
4.வங்கதேசத்திலிருந்து கடந்த பல ஆண்டுகளாக வெளியேறி, வடகிழக்கு மாநிலங்களில் குடிபெயர்ந்த இந்துக்கள் அதிகம். அவர்கள், தங்களது குடியுரிமை குறித்துத் தொடர்ந்து போராடி வந்த நிலையில் இந்த மசோதா ஒப்புதல் ஆகியுள்ளது.
5.லோக்சபாவில் இந்த மசோதா, சுலபமாக ஒப்புதல் பெற்றுவிடும் எனத் தெரிகிறது. ஆனால், ராஜ்யசபாவில் அரசுக்குப் பெரும்பான்மை இல்லாத காரணத்தால், அங்கு ஒப்புதல் பெறுவது சிரமமாகவே இருக்கும்.
6.காங்கிரஸ், திரிணாமூல், திமுக, சமாஜ்வாடி, இடதுசாரிக் கட்சிகள், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ஆனால், அதிமுக உள்ளிட்ட சில பாஜக ஆதரவுக் கட்சிகள், மத்திய அரசுக்கு உதவிபுரிய வாய்ப்புள்ளது.
7.பாஜக-வின் அசாம் மாநில கூட்டணிக் கட்சியான ஏஜிபி, இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
8.நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை, உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்வார் என்று சொல்லப்படுகிறது. அப்போது பாஜகவின் அனைத்து உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் ஆஜராகியிருக்க வேண்டும் என்று உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளதாம்.
9.இந்தியாவின் அண்டை நாடுகளில் முஸ்லிம் பெரும்பான்மையினர் இருப்பதால், அவர்களுக்குப் பிரச்னை இருக்காது என்று ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
10.அண்டை நாடுகளில் இருக்கும் சிறுபான்மையினர், அந்நாட்டின் பெரும்பான்மையினரால் துன்புறத்தப்பட்டுள்ளார்கள். அதனால்தான் அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் வகையில் இந்த மசோதா உள்ளது - ராஜ்நாத் சிங்.