குடியுரிமை (திருத்த) மசோதாவை சட்டமாக மாற்றினாலும் அதை மேற்கு வங்கத்தில் செயல்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்திருருந்தார். இந்த வரிசையில் தற்போது கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களும் இணைந்துள்ளன. இது இந்திய நாட்டின் மதச்சார்பற்ற நற்பெயரை அகற்ற மத்திய அரசின் முயற்சி என்று விமர்சித்துள்ளனர்.
இந்த மசோதாவை இந்தியாவின் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக தன்மை மீதான தாக்குதல் என்று கூறி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். இது போன்ற “அரசியலமைப்பற்ற” சட்டத்திற்கு தனது மாநிலத்தில் இடமில்லை என்று கூறிவிட்டார்.
“இந்திய அரசியலமைப்பு அனைத்து இந்தியர்களுக்கும் அவர்களின் மதம், சாதி, மொழி, கலாசார பாலினம் தொழில் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் குடியுரிமை பெறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது. குடியுரிமை திருத்த மசோதாவால் இந்த உரிமை ரத்து செய்யப்படும். மதத்தின் அடிப்படையில் குடியுரிமை என்பது அரசியலமைப்பை நிராகரிக்கும் செயலாகும்” என்று அவர் கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநில சட்டசபையில் அமரீந்தர் சிங் “இந்த சட்டம் மிகவும் பிளவுபடுத்தும் தன்மை கொண்டது. நாட்டின் மக்களை மத அடிப்படையில் பிரிக்கும் முயற்சிக்கும் எந்தவொரு சட்டமும் சட்டவிரோதமானது மற்றும் நெறிமுறையற்றது என்று கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன்பே மம்தா பானர்ஜி எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார். “இந்த மசோதாவைக் கண்டு பயப்பட வேண்டாம். நாங்கள் உங்களுடன் இருக்கும் வரை யாரும் எதையும் திணிக்க முடியாது” என்று கூறினார்.
இந்த மசோதாவுக்கு எதிராக யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் காங்கிரஸ் எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளது.
வடகிழக்கு இந்தியாவில் இந்த மசோதாவுக்கு எதிராக வன்முறை போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.