Citizenship Bill Debate: மிகவும் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த மசோதா, ராஜ்யசபாவில் நேற்று ஒப்புதல் பெற்றுவிட்டது. முன்னதாக லோக்சபாவிலும் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டதால், அடுத்ததாக இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றுவிட்டால், மசோதா சட்டமாக மாறிவிடும். இந்த மசோதா குறித்து எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற விவாதத்தின்போது கடுமையாக வாதிட்டன. ராஜ்யசபா உறுப்பினரான முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் (P Chidambaram), மசோதா குறித்த தன் பார்வையை அவையிலிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா (Amit Shah) முன்னிலையில் பேசினார்.
மிகவும் சாந்தமாக எழுந்து நின்று பேசத் தொடங்கிய சிதம்பரம், “எனக்கு 10 நிமிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவ்வளவு நேரம் எனக்குத் தேவைப்படாது. அதற்கு முன்னரே எனது பார்வையை முன்வைத்து விடுகிறேன்,” என ஆரம்பித்தார்.
தொடர்ந்து, “இந்த மசோதா பாகிஸ்தான், அப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை மட்டும் இணைத்துக் கொண்டு மற்ற அனைத்து அண்டை நாடுகளையும் புறந்தள்ளி இருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இந்த அரசின் இந்துத்துவ கொள்கைகளை சட்டமாக்குவதைத் தவிர வேறு என்னக் காரணம் இருக்கும்.
மத அடிப்படையில் ஒடுக்கப்பட்ட இந்த 3 நாடுகளில் இருப்பவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என்று சொல்கிறது மத்திய அரசு. அதுவும் முஸ்லிம்களுக்கு இல்லை. அந்த நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், கிறுத்துவர்கள், புத்தர்கள், ஜெயினர்கள், பார்சிக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு மட்டுமே 5 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் இருந்தால் குடியுரிமை கொடுக்கப்படும் என்கிறீர்கள். ஆனால் இலங்கையில் இருக்கும் தமிழர்களின் நிலைமை. அவர்களும் இந்துக்கள்தானே. பூட்டானில் இருக்கும் கிறித்துவர்களின் நிலைமை. ஏன் இந்த பாகுபாடு.
தற்போது இந்த மசோதாவை ராஜ்யசபாவிலும் நிறைவேற்றி, அதை நடைமுறைக்குக் கொண்டு வர மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். ஆனால், இங்கு அது குறித்த விவாதம் நிற்கப் போவதில்லை. அடுத்ததாக உச்ச நீதிமன்றத்தில் இந்த மசோதாவுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும். நாடாளுமன்றத்தில் இருக்கும் நாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இந்த மக்களால் நடக்கும் நாட்டின் அரங்கத்தில் சட்ட சாசனத்திற்கு எதிரான மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால், அடுத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் கைகளில் அதன் எதிர்காலம் அமையும். இது சரியான நடைமுறையா?
இந்த மசோதாவை இப்படி வரையறுக்கலாம் என்று சொன்னவர்கள் யார். சட்ட அமைச்சகமா, உள்துறை அமைச்சகமா, அட்டர்னி ஜெனரலா. அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடத்தில் ஏன் இப்படியொரு சட்டத்தை இயற்றினீர்கள் என்று கேள்வியெழுப்பப்பட வேண்டும். நாம் இது குறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டும்,” என்று உரையாற்றினார்.
பல எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உரைகளுக்கு எதிர்ப்புகள் தெரிவித்த, கூச்சலிட்ட பாஜகவினர் ப.சிதம்பரம் பேசுகையில் பொறுமையாக கவனித்தனர். அமித்ஷா உட்பட.