குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷாஹீன்பாக் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று டெல்லியின் மற்றொரு பகுதியான ஜாஃப்ராபாத்தில் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கைகளில் தேசியக் கொடியினை ஏந்தியவாறு, சி.ஏ.ஏ மற்றும், என்.ஆர்.சி ஆகியவற்றிலிருந்து விடுதலை வேண்டும் என்கிற முழக்கங்களை முன் வைத்திருந்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமை மாலை ஜாஃப்ராபாத் அருகேயுள்ள மவுஜ்பூரில் நடைபெற்றுக்கொண்டிருந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்துள்ளதாகக் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவத்தன்று மாலை உள்ளூர் பா.ஜ.க பிரமுகரான கபில் மிஸ்ரா குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகத் தனது தலைமையில் பேரணியைத் தொடங்க முற்பட்டபோது கலவரம் தொடங்கியதாகக் காவல் துறையின் தெரிவித்துள்ளனர். சம்பவத்திற்குப் பின் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லையென்றாலும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல்துறையினர் குறிப்பிட்டிருக்கின்றனர்.
இதே போல் உத்தரப் பிரதேசத்தில் அலிகர் பகுதியில் காவல்துறையினருக்கும், குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில், காவல்துறையினருக்குச் சொந்தமான வாகனம் ஒன்று அழிக்கப்பட்டதாகவும், சில காவலர்கள் காயமடைந்ததாகவும், அந்த பகுதியில் உள்ள கடை ஒன்று சேதப்படுத்தப்பட்டதாகவும் காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.
1. சம்பவ இடத்திலிருந்த வந்த நேரலை காட்சிகளில், குடியுரிமை திருத்தச் சட்டம் எதிர்ப்பாளர்களும், ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவர் கற்களைக் கொண்டு தாக்கிக் கொண்டது தெரியவந்தது. இது காவல் தடுப்புகளுக்கு அருகாமையில் நடைபெற்றுள்ளது.
2. காவல்துறையினருடன் துணை ராணுவப்படையினரும் கும்பல்களைக் கட்டுக்குள் கொண்டு வரக் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களில் பெரும்பாலும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றிருந்ததால் காவல்துறையினர் தங்களது முழு பலத்தினை பயன்படுத்தவில்லை என பா.ஜ.க மூத்த தலைவர் விஜய் கோயல் கூறியிருந்தார்.
3. தற்போதைய நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், அவர்களைக் கலைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளதாகவும் டெல்லி காவல் துறையின் மூத்த அதிகாரி அலோக் குமார் தெரிவித்திருக்கிறார். மேலும் குற்றவாளிகளை அடையாளம் கண்ட பின்பு நாங்கள் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
4. உத்தரப் பிரதேசத்தில் அலிகர் பகுதியில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கு இடையே மோதல்கள் வெடித்திருந்தது. மோசமான வானிலை காரணமாக அவர்கள் கூடாரங்களை அமைத்துக்கொள்ளக் கோரியதாகவும், ஆனால், அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததாகவும், பின்பு அவர்கள் கலைந்து சென்றுவிட்டார்கள் எனவும், மாவட்ட நீதிபதி சந்திர பூஷன் சிங் தெரிவித்திருந்தார்.
5. கடந்த சனிக்கிழமையன்று சுமார் 200 பெண்கள் தங்கள் கைகளில் தேசியக் கொடியினை ஏந்தியவாறு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஆசாதி முழக்கங்களை எழுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
6. இந்தப் போராட்டத்தில் அதிகமாகப் பெண்களும் அவர்களுடன் குழந்தைகளும் இணைந்ததால் ஒரே இரவில் கூட்டத்தின் எண்ணிக்கை அதிகரித்தது. “நாங்கள் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றிலிருந்து சுதந்திரம் பெற விரும்புகிறோம்.” எனப் போராட்டக்காரர்களில் ஒருவர் தெரிவித்திருந்தார். இந்த போராட்டம் காரணமாக ஜாஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையல் தற்காலிகமாக மூடப்பட்டது.
7. “இந்த போராட்டம் பிரதமரைத் தோற்கடிக்க முடியாமல், எதிர்க்கட்சிகளால் முன்கூட்டி திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தினை எதிர்த்து போராட்டம் நடத்துவதும், அதற்கான பிரச்சாரத்தினை ஊக்குவிப்பதும் தவறு.” ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசியது தற்போது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
8. ஜஃப்ராபாத்தில் நடைபெற்ற போராட்டமானது, நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெறுகின்ற போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும். இது ஷாஹீன் பாக் பெண்கள் போராட்டத்தின் மீதான ஈர்ப்பிலிருந்து உருவானதாகும்.
9. தென்கிழக்கு டெல்லி மற்றும், நொய்டாவை இணைக்கும் சாலையை மறித்துக் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக ஷாஹீன் பாக்கில் போராட்டம் நடந்துவருகிறது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றிருக்கிறார்கள். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், அவர்களை அணுகும் முயற்சியிலும் உச்ச நீதிமன்றம் மூன்று நபர்கள் கொண்ட குழுவினை அமைத்திருந்தது.
10. இந்தக் குழுவில் ஒருவரான வஜாஹத் ஹபீபுல்லா “ஷாஹீன்பாக் போராட்டம் நடைபெறும் பகுதியில் மாற்றுச் சாலைகள் உள்ளன. அவைகள் காவல் துறையினரால் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. போராட்டக்காரர்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது என்பது சரியான வாதம் அல்ல. பெண்கள் எதிர்கொள்ளக்கூடிய வழக்கமான அச்சுறுத்தலிலிருந்து தற்காத்துக்கொள்ள இந்த இடத்தினை தேர்வு செய்துள்ளார்கள்” என நீதிமன்றத்திற்குப் பிரமாணப் பத்திரத்தின் மூலமாகத் தகவல் தெரிவித்திருந்தார்.