அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு வெளியே கலவரம் ஏற்பட்டதால், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
அமெரிக்காவில் 6 நாட்களில் கலவரத்தைத் தூண்டியவர்களை உள்நாட்டு பயங்கரவாதிகள் என்று டிரம்ப் நிர்வாகம் முத்திரை குத்தியதால், எதிர்ப்பாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் மேலும் கடும் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
வெள்ளை மாளிகைக்கு அடுத்துள்ள ஒரு சிறிய பூங்காவில் அடுத்தடுத்து வன்முறை மோதல்கள் நிகழ்ந்துள்ளன. இதைத்தொடர்ந்து, கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர, அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டு, மிளகு தெளிப்பான் மற்றும் ஃபிளாஷ் பேங் கையெறி குண்டுகளை பயன்படுத்தி பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய கூட்டத்தை கலைத்தனர்.
அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் பாதுகாப்பில் இருந்த போது மரணமடைந்தார். இந்த விவகாரம் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் மே.25ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரம் வெடித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஹூஸ்டன் உள்ளிட்ட நகரங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே, மினியாபொலிஸின் இரட்டை நகரமான செயின்ட் பாலில் உள்ள மாநில தலைநகருக்கு வெளியே உன்னிப்பாக கவனிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.
இதுதொடர்பாக 31 வயது கறுப்பு பெண் முனா அப்தி கூறும்போது, எங்களுக்கு கருப்பினத்தை சேர்ந்த குழந்தைகள், சகோதரர்கள், நண்பர்கள் உள்ளனர். அவர்கள் இறப்பதை நாங்கள் விரும்பவில்லை. தொடர்ந்து, நடைபெறும் இது போன்ற அடக்குமுறைகளால் நாங்கள் சோர்வடைந்துள்ளோம்.
என் மகன் உயிருடன் இருக்க வேண்டும் என்பதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன் என்று அவர் கூறினார். இந்த போராட்டத்தை காரணமாக நூற்றுக்கணக்கான போலீசார் மற்றும் காவல்படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
இதேபோல், நியூயார்க், மியாமி உள்ளிட்ட நகரங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன.
வாஷிங்டன் மேயர் இரவு 11:00 மணி முதல் காலை 6:00 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்.
வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடந்த போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாதுகாப்புக்காக பதுங்கு குழிக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் அங்கு சுமார் ஒரு மணி நேரம் இருக்க வைக்கப்பட்டுள்ளார் என தெரிகிறது.
வெள்ளை மாளிகைக்கு வெளியே திடீரென நடந்த இந்த போராட்டத்தை டிரம்பின் பாதுகாப்பு அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை என அமெரிக்க டெய்லியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த சமயத்தில், மெலனியா டிரம்ப் மற்றும் பரோன் டிரம்ப் ஆகியோரும் அவருடன் அழைத்துச் செல்லப்பட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.