முதல்வருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில், ஒப்பந்தம் வழங்கியது தொடர்பாக அமைக்கப்பட்ட கமிட்டிகள் குறித்த விவரத்தை உயர் நீதிமன்றத்தில் அளிக்குமாறு அரசு தரப்பு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அரசு திட்டங்களை நிறைவேற்றுவதில் தனக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் பணிகளை வழங்கி அதில் முறைகேடு செய்தார் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாநிலங்களவை திமுக உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அவர்கள் தங்களது மனுவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ரூ. 3,500 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களை தனது உறவினர்களுக்கும், பினாமிகளுக்கும் அளித்துள்ளதாக கூறியுள்ளனர்.
முதல்வருக்கு எதிரான புகாரை ஊழல் தடுப்பு பிரிவு விசாரிக்க கூடாது என்றும், சுதந்திரமாக இயங்கும் விசாரணை அமைப்புதான் விசாரிக்க வேண்டும் என்று கோரியும் திமுக தலைவர் ஸ்டாலின் மனுத்தாக்கல் செய்துள்ளார். சாதாரணமாகவே 8 முதல் 10 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும் திட்டங்களுக்கு ரூ. 21 கோடிக்கும் அதிகமாக கணக்கு காட்டப்பட்டுள்ளது என்று மனுதாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரித்த நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் நடந்து வருகிறது. முதல்வர் மீதான புகார் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கையை அளிக்க வேண்டும் என ஊழல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி விசாரணை அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் இன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இன்று வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, காண்ட்ராக்ட் வழங்கியது தொடர்பாக அமைக்கப்பட்ட கமிட்டி குறித்த அறிக்கையை வரும் 24-ம்தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். மீண்டும் இந்த வழக்கு வரும் 26-ம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)