விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்!
ஆந்திராவில் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவால் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து இன்று காலையில் ஸ்டைரீன் என்ற ரசாயன வாயு கசிந்து வெளியேறி உள்ளது. அதிக அழுத்தத்துடன் வெளியேறிய வாயு, ஆலைக்கு வெளியே பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பரவியது.
இதையடுத்து இந்த வாயுவை சுவாசித்ததால் சாலையில் நடந்து சென்றவர்கள், வீடுகளில் இருந்தவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில் இரு குழந்தைகள் 13 பேர் பலியாகியுள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ரசாயன ஆலையைச் சுற்றியுள்ள 5 கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்
இதனிடையே ஆந்திராவில் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவால் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையில் விஷவாயு காரணமாக பலர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.
விஷவாயுவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அனைவரும் விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.