சமீபத்தில் கிழக்கு லடாக் பகுதியில் கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட இந்திய சீன ராணுவ வீரர்களிடையேயான மோதலில் இந்தியாவை சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு இந்திய எல்லைக்குள் சீனா மீண்டும் மீண்டும் ஊடுருவுவது, இரு நாடுகளளும் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் முற்றிலும் புறக்கணிப்பதாக உள்ளது, என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மே மாத தொடக்கத்திலிருந்து சீன ராணுவம் தனது துருப்புகளையும், ஆயுதங்களையும் எல்.ஏ.சி பகுதியில் குவித்து வந்திருந்ததாக ராணுவத்துறை வட்டாரங்கள் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தனர். லெப்டினென்ட் ஜெனரல் லெவல் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் நிலைமை சீரடைந்துள்ளது. இருப்பினும் பேச்சுவார்த்தைகள் முற்றிலுமாக முடிந்துவிடவில்லை.
“துரதிர்ஷ்டவசமாக, கடந்த பல ஆண்டுகளில் வழக்கமான ரோந்துக்கு தடங்கலை நாம் சந்தித்திருக்கின்றோம். அவை பெரும்பாலும் ஒருதலைப்பட்சமாக இருக்கின்றன. கட்டுப்பாட்டு பகுதியில் பெரிய அளிவில் துருப்புகள் நிலை நிறுத்தப்பட்டன. மட்டுமல்லாமல் ஏற்றுக்கொள்ள முடியாத உரிமைகோரல்களும் இருந்தது வந்தன. இதற்கு கால்வான் பள்ளத்தாக்கின் சமீபத்திய சீன நிலைப்பாடு ஒரு உதாரணம். என வெளியுறவுதுறை அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ரோந்து புள்ளி 15 இல், சீன வீரர்கள் பெரிய கூடாரங்களை அமைத்து கிட்டத்தட்ட ஒரு மாதமாக முகாமிட்டுள்ளனர். ரோந்து புள்ளி 17 இல், இரு தரப்பிலிருந்தும் பெரிய துருப்புக்கள் அணிதிரட்டப்பட்டுள்ளன. பாங்கோங் ஏரியில், சீன துருப்புக்கள் "விரல் 4"("Finger 4")-இது ஒரு மலைக்குன்றின் பெயராகும்- வரை நகர்ந்துள்ளன. மேலும் 120 க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் டஜன் படகுகளை குவித்திருந்தது.
ஏப்ரல் முதல், பாங்காங் ஏரியின் கரையில் உள்ள ஃபிங்கர்ஸ் பகுதியில், ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதி (கோக்ராவில் இராணுவத்தின் பகுதிக்கு அருகில்), கால்வான் பள்ளத்தாக்கு மற்றும் வடக்கே மேலும் டெப்சாங் சமவெளிகளில் சீன ஊடுருவல்கள் பதிவாகியுள்ளன. ஜூன் 15 மோதலுக்குப் பின்னர், வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் தனது சீனப் பிரதிநிதியுடனான பேச்சுவார்த்தையில், சீனா "அதன் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்து சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று பரிந்துரைத்திருந்தார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸில் நேற்று வெளியிடப்பட்ட டெப்சாங் சமவெளி பிராந்தியத்தில் சீன ஊடுருவல் குறித்த அறிக்கை குறித்து இராணுவ வட்டாரங்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.
3,488 கி.மீ தூரமுள்ள உண்மையான கட்டுப்பாட்டு பாதையில் இந்தியா தனது வலிமையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறையும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளன. அனைத்து ரோந்து புள்ளிகளிலும் இராணுவத்திற்கு உதவ ஒரு படைப்பிரிவுக்கு பதிலாக ஒரு கம்பெனியை(company) நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு படைப்பிரிவில் பொதுவாக 30 ஜவான்கள் இருப்பார்கள், ஒரு கம்பெனியில் சுமார் 100 ஜவான்கள் இருப்பார்கள்.