பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு மிக விரிவான பேட்டியளித்தார். நேர்காணலின் போது பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கமாக பேசியிருந்தார் மோடி. பிரதமரின் பேட்டி ஒளிபரப்பான பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுரேஜ்வாலா, ‘பிரதமர் பல கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மழுப்பியுள்ளார். அந்த நேர்காணல் முழுவதும் பிரதமர் தன்னைப் பற்றி மட்டும்தான் பிதற்றியுள்ளார்' என்று கறாரான விமர்சனம் வைத்தார்.
காங்கிரஸ் பிரதமரிடம் கேட்ட கேள்விகள்:
1. 'முதலாவதாக ஒன்றைச் சொல்லுங்கள் மோடிஜி. ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் வந்து சேரும் என்றீர்கள். அது வந்ததா. 80 லட்சம் கோடி கருப்புப் பணம் மீட்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். ஒரு ரூபாயாவது மீட்கப்பட்டுள்ளதா?'
2. 'ஓராண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று சொன்னீர்கள். அப்படிப் பார்த்தால் 55 மாதங்களில் 9 கோடி வேலைகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 9 லட்சம் வேலை வாய்ப்பாவது உருவாக்கிக் கொடுத்தீர்களா?'
3. 'விவசாயிகளிடம், அவர்களின் விளைச்சலுக்கான பணம் மற்றும் கூடுதலாக 50 சதவிகித லாபம் கொடுக்கப்படும் என்றீர்கள். குறைந்தபட்சம், விவசாயிகளுக்கு விளைச்சலுக்கான பணமாவது கிடைத்ததா?'
4. தொழில் செய்வது மிகச் சுலபமாக்கப்படும் என்று சத்தியம் செய்தீர்கள். பிறகு ஏன் ஜி.எஸ்.டி கொண்டு வந்தீர்கள்?'
5. உங்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கருப்புப் பணம் வைத்திருவர்கள், அதை வெள்ளையாக மாற்ற உறுதுணையாக இருந்தது. ஆனால், அதனால் இந்திய பொருளாதாரத்துக்கு 3.5 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. வங்கியில் பணமெடுக்க வரிசையில் நின்றதால் 120 பேர் இறந்தனர். இதற்கெல்லாம் யார் பொறுப்பேர்பார்கள்?'
6. 'உங்கள் ஆட்சிக் காலத்தில் ஜம்மூ - காஷ்மீரில் 428 பாதுகாப்புப் படையினரும், 278 மக்களும் உயிரிழந்தனர். அதைப்போலவே, மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலால் 248 பாதுகாப்புப் படையினரும், 378 மக்களும் கொல்லப்பட்டனர். ஏன் தேசிய பாதுகாப்பைப் புறந்தள்ளினீர்கள்?'
7. 'உங்கள் ஆட்சியில்தான் ஊழல் உச்சத்தைத் தொட்டுள்ளது. 30,000 கோடி ரூபாய் ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த வித முறைகேடும் நடைபெறவில்லை என்றால், அது குறித்து கூட்டு நாடாளுமன்ற கமிட்டி விசாரணைக்கு ஏன் தயங்குகிறீர்கள்?'
8. 'கங்கை நதி தற்போது சுத்தமாக இருக்கிறதா. எத்தனை ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒன்று கூட இருக்காது'
9. 'ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேண்டு அப், ஸ்கில் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற திட்டங்களுக்கெல்லாம் என்னவாயிற்று. நித்தி அயோக், உற்பத்தித் துறை வளர்ச்சி 0.5 சதவிகிதம் என்கிறது'
10. 'சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வந்தாலும், எரிபொருள் விலை ஏன் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதுதான் நீங்கள் சொன்ன ‘அச்சே தின்' நாட்களா?'