பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் மீது தேர்தல் விதிமீறல் புகார்களை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்திருந்தது காங்கிரஸ். அந்த புகார் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி தற்போது உச்ச நீதிமன்றத்தை காங்கிரஸ் நாடியுள்ளது. இது குறித்த வழக்கு நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி சுஷ்மிதா தேவ், ‘தேர்தல் ஆணையம், நாங்கள் பிரதமர் மோடி மற்றும் அதிம்ஷா மீது அளித்த புகாரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்னும் 24 மணி நேரத்தில் இது குறித்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
தேர்தல் பிரசாரங்களின் போது பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா, வெறுப்பை உமிழும் வகையில் உரையாற்றியுள்ளனர். அரசியல் ஆதாயத்துக்காக ராணுவப் படைகளின் செயல்பாடுகள் குறித்து பேசியுள்ளனர்' என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 3 வாரங்களாக தேர்தல் ஆணையம், காங்கிரஸ் அளித்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தேவ் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த மாதம் தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளுக்கு, ‘ராணுவப் படைகளை தேர்தல் பிரசாரத்தில் இழுக்காதீர்கள்' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. புல்வாமா தாக்குதல் மற்றும் பாலகோட் விமானப்படை தாக்குதலைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.
குஜராத்தில் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பிராசாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடி, ‘முன்பு பாகிஸ்தான், நம் மீது தீவிரவாத தாக்குதல் நடத்திவிட்டு, எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கும். நாம் திருப்பியடித்தால், அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று பாகிஸ்தான் நம்மை அச்சுறுத்தும். ஆனால், தற்போது அவர்கள் என்ன செய்தாலும் அதற்கு பதிலடி கொடுக்கப்படும்' என்று பேசினார்.
சமீபத்தில் பிகாரில் பேசிய அமித்ஷா தேர்தல் பரப்புரையின்போது, ‘அமெரிக்கா, இஸ்ரேலுக்குப் பிறகு இந்தியாதான் உலகிலேயே தீவிரவாதத்துக்குத் தக்க பதிலடி கொடுத்த நாடு' என்று பேசினார்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இந்த மாதத் தொடக்கத்தில் பிரசாரக் கூட்டத்தில் இந்திய ராணுவத்தை, ‘மோடியின் ராணுவம்' என்று சொன்னார். அவரின் இந்த கருத்தும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.
அதேபோல மகாராஷ்டிரா, லத்தூரில் மோடி பேசும்போது, ‘புல்வாமா தியாகிகளுக்கு வாக்களியுங்கள்' என்று சர்ச்சையை கிளப்பினார்.