தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ராகுலை கெஞ்சி காங்கிரஸ் ஒரு மாதத்தை வீணடித்து விட்டதாக கட்சியின் மூத்த தலைவர் கரன் சிங் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கியது.
இதையடுத்து ராகுலை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றன. நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் பேரணி, பொதுக்கூட்டங்களை நடத்தியும், தீர்மானங்கள் போட்டும் ராகுல் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இருப்பினும் ராகுல் தனது முடிவில் விடாப்பிடியாக இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு அடுத்த கட்சி தலைவரை தேர்வு செய்யுங்கள் என்று ராகுல் வலியுறுத்தினார். இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சுஷில் குமார் ஷிண்டே ஆகிய 2 பேரில் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்த பட்டியலில் தற்போது முகுல் வாஸ்னிக்கும் இணைந்துள்ளார். இதற்கிடையே சமீபத்தில் பேட்டியளித்த பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரிந்தர் சிங் காங்கிரசுக்கு இளம் ரத்தத்தை பாய்ச்ச வேண்டும் என வலியுறுத்தினார்.
இருப்பினும் தலைவர் விவகாரத்தில் காங்கிரஸ் இன்னும் தெளிவான முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் என்.டி.டி.வி.க்கு பேட்டியளித்த மூத்த தலைவர் கரன் சிங் ராகுலை கெஞ்சி ஒரு மாதத்தை காங்கிரஸ் வீணடித்து விட்டது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 'ராகுலுக்கு நம்மால் நெருக்கடி கொடுக்க முடியாது. அவர் நேர்மையானவர். கட்சிக்காக கடினமாக அவர் உழைத்துள்ளார். அவரை அவரது வழியில் விட்டு விட வேண்டும். அவரது முடிவை முதல் நாளில் இருந்தே ஆதரித்து வருகிறேன்' என்று தெரிவித்தார்.