The Eyes of Darkness என்ற புத்தகத்தை படிக்குமாறு மணிஷ் திவாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
New Delhi: கொரோனா வைரஸால் உலகமே ஒருபக்கம் நடுங்கிக் கொண்டிருக்க, அது உயிரி ஆயுதமாக (Bio - Weapon) இருக்கக்கூடுமோ என்ற சந்தேகத்தை காங்கிரஸ் கட்சி கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக முன்னாள் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மணிஷ் திவாரி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-
The Eyes of Darkness என்ற புத்தகத்தை அமெரிக்காவை சேர்ந்த டீன் கூன்ட்ஸ் எழுதியுள்ளார். இந்த புத்தகம் 1981-ல் வெளியானது. இதனைப் படித்துப் பார்க்கும்போது தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் என்பது உயிரி ஆயுதமாக இருக்க கூடுமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இந்த புத்தகத்தை மக்கள் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மணிஷ் திவாரி கூறியுள்ளார்.
தனது ட்விட்டர் பதிவில், ‘அவர்கள் அந்த பொருளை வுஹான் – 400 என்று அழைக்கிறார்கள். ஏனென்றால் அது வுஹானுக்கு வெளிப்புறத்தில் அமைந்துள்ள மரபணு மாற்ற ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டவை. அந்த ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 400-வது ஆபத்தை ஏற்படுத்தும் பொருள் என்பதால் அதற்கு வுஹான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது' என்ற The Eyes of Darkness புத்தகத்தின் சில வரிகளை மணிஷ் திவாரி மேற்கோள் காட்டியிருக்கிறார்.
தற்போது 30 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதில் 99 சதவீதம் பேர் சீனாவை சேர்ந்தவர்கள். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டால் ஒருவருக்கு சளி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்டவை ஏற்படும். இந்த வைரஸ் இதற்கு முன்பாக தாக்குதலை நடத்தவில்லை என்பதால் இதற்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.