காங்கிரஸ் மூத்த தலைவர் பிருத்விராஜ் சவான் உள்ளிட்ட பல காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கத்தில் தாங்கள் சேர்த்தக்கொள்ளப்படாததால், வருத்தமடைந்துள்ளதாக என்டிடிவிக்கு தகவல் கிடைத்துள்ளன.
முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 34 பேர் நேற்றைய தினம் பதவியேற்றுக்கொண்டனர்.
கட்சிக்காக நேர்மையாக பணியாற்றியவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சவான், நசீம் கான், பிரணிதி ஷிண்டே, சங்கிராம் தோப்டே, அமீன் படேல் மற்றும் ரோஹிதாஸ் பாட்டீல் ஆகியோர் நேற்று மாலை கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை சந்தித்து தங்கள் கவலைகளை பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது.
மகாராஷ்டிரா அமைச்சரவையில் அமைச்சர்களாக காங்கிரஸ் தலைவர்கள் அசோக் சவான், திலீப் வால்ஸ்-பாட்டீல், தனஞ்சய் முண்டே, சுனில் சத்ரபால் கேதார், கே.சி.பத்வி ஆகியோர் பதவியேற்றனர். இருப்பினும், அவர்களுக்கு இன்னும் இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. போர்ட்ஃபோலியோ ஒதுக்கீடு ஓரிரு நாட்களில் செய்யப்படும் என்று முதல்வர் கூறினார்.
இந்நிலையில், அவர்கள் இன்று ராகுல் காந்தியை அவரது டெல்லி வீட்டில் சந்தித்தனர். மல்லிகார்ஜுன் கார்கே, கே.சி.வேணுகோபால் ஆகியோரும் இந்த கூட்டத்தில் அவர்களுடன் கலந்து கொண்டனர்.
சரியாக உத்தவ் தாக்கரே பதவியேற்று ஒரு மாதம் கடந்த நிலையில், தனது அமைச்சரவையில் புதிதாக 36 அமைச்சர்களை இணைத்துள்ளார். இதில், என்.சி.பி தலைவர் சரத் பவாரின் மருமகன் அஜித் பவார் அவரது துணை முதல்வராக பதவியேற்றுள்ளார்.
கடந்த மாதம், அஜித் பவார் பாஜகவுக்கு பக்கபலமாக இருந்து தேவேந்திர ஃபட்னவிஸூடன் துணை முதல்வராக பதவியேற்றார். ஆனால், உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்ட சில மணி நேரங்களில் அஜித் பவார் பதவி விலகினார். இதைத்தொடர்ந்து, அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜகவின் 80 மணி நேர முயற்சி முடிவுக்கு வந்தது.
இதனிடையே, அமைச்சரவை விரிவாக்கம் நடந்து முடிந்த சில மணி நேரங்களுக்கு பின்னர், பீட் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ தன்னை 'அரசியலுக்கு தகுதியற்றவர்' என்று அழைத்ததாக ராஜினாமா செய்துள்ளார்.
தனது ராஜினாமா குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறும்போது, நான் பதவி விலகுவது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு தெரிவித்துவிட்டேன். தொடர்ந்து, சபாநாயகரை சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைப்பேன். எனது ராஜினாமாவுக்கும் அமைச்சரவை விரிவாக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
(With inputs from PTI)