காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி (Sonai Gandhi), அவரது மகன் ராகுல் காந்தி (Rahul Gandhi) மற்றும் மகள் பிரியங்கா காந்தி வத்ராவிற்கு (Priyanka Gandhi) இனி மத்திய அரசின், ‘எஸ்பிஜி' (SPG) பாதுகாப்பு அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இனி காந்தி குடும்பத்திற்கு Z ப்ளஸ் பாதுகாப்புதான் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
அரசின் இந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர், டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீட்டிற்கு வெளியே போராட்டத்தில் குதித்தனர்.
“சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியின் வாழ்க்கையில் அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த நினைப்பில் இதைச் செய்கிறார்கள்,” என்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கேள்வியெழுப்பினார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, 1991 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பிறகு, காந்தி குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.
“பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா, தனிப்பட்ட முறையில் இருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சியை இந்த சம்பவத்தின் மூலம் வெளிக்காட்டி வருகிறார்கள்,” என்று காங்கிரஸின் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
காந்தி குடும்பத்திற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்பதை கணக்கில் கொண்டு இந்த சிறப்புப் பாதுகாப்பு திரும்பப் பெறும் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
காந்தி குடும்பத்திற்கு நெருக்கமாக இருப்பவர்கள், அரசின் இந்த முடிவு குறித்து அவர்களுக்கே தெரிந்திருக்கவில்லை என்றும், ஊடகங்கள் வாயிலாகவே இதை கண்டுபிடித்துள்ளார்கள் என்றும் கூறுகின்றனர். Z ப்ளஸ் பாதுகாப்பின் மூலம் சுமார் 100 சி.ஆர்.பி.எப் வீரர்களைக் கொண்டு காந்தி குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்படும்.
தற்போது நாட்டில் எஸ்பிஜி பாதுகாப்பு இருக்கும் ஒரே நபர் பிரதமர் நரேந்திர மோடி மட்டும்தான். தேசிய அளவில் சுமார் 3,000 எஸ்பிஜி பாதுகாப்புப் படை வீரர்கள், முக்கிய தலைவர்களை பாதுகாப்பதில் பணியமர்த்தப்படுவார்கள்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, கொல்லப்பட்ட பிறகு, 1985 ஆம் ஆண்டு, எஸ்பிஜி பாதுகாப்பு, பிரதருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொடுக்கப்படி சட்டம் வரையறுக்கப்பட்டது.
ராஜிவ் காந்தி கொலைக்குப் பிறகு, முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் இந்த பாதுகாப்பு விரிவுபடுத்தப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.