This Article is From May 26, 2020

மகாராஷ்டிர அரசில் குழப்பம்: அரசியல் வட்டாரத்தை பரபரக்கச் செய்த ராகுலின் பகீர் கருத்து!

இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிராதான்.

கொரோனா நெருக்கடியால் தேசியவாத காங்கிரஸுக்கும் சிவசேனாவுக்கும் இடையில் பல்வேறு விஷயங்களில் மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. 

ஹைலைட்ஸ்

  • கூட்டணியில் குழப்பம் குறித்து ராகுல் பேச மறுத்துவிட்டார்
  • தே.காங்கிரஸ் மற்றும் சிவசேனாவும் எந்தப் பிரச்னையும் இல்லை என கூறியுள்ளன
  • பாஜக தரப்பு, ராகுலின் கருத்தை விமர்சித்துள்ளது
New Delhi:

மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி அரியணையில் உள்ளது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே மாநிலத்தின் முதல்வராக உள்ளார். இந்நிலையில் தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவாரின் அடுத்தடுத்த இரண்டு சந்திப்புகள், மகாராஷ்டிர அரசியல் வட்டாரத்தை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸின் ராகுல் காந்தி, இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளது பிரச்னையின் வீரியத்தை அதிகரித்துள்ளது. 

“ஒரு விஷயம் பற்றி நான் தெளிவாக வகைப்படுத்த விரும்புகிறேன். நாங்கள் மகாராஷ்டிர அரசை ஆதரிக்கிறோம். ஆனால், நாங்கள் அங்கு முடிவெடுக்கும் இடத்தில் இல்லை. நாங்கள் பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் முடிவெடுக்கும் இடத்தில் உள்ளோம். ஒரு அரசை நடத்துவதற்கும், ஆதரிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன,” என்று மகாராஷ்டிராவில் நிலவும்  கொரோனா பிரச்னை குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார் ராகுல் காந்தி. 

அவர் மேலும், “மகாராஷ்டிரா மிக முக்கியமான மாநிலம். மும்பைதான் வர்த்தக தலைநகரமாக உள்ளது. எனவே, அங்கு கொரோனா பிரச்னையை சமாளிப்பது கடினமான விஷயம்தான். அங்குப் பிரச்னையை சமாளிக்க மத்திய அரசு அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்,” என்றார். 

79 வயதாகும் மகாராஷ்டிராவின் மூத்த அரசியல்வாதியான சரத் பவார், நேற்று மும்பையில் இருக்கும் உத்தவ் தாக்கரே வீட்டிற்கு நேரில் சென்று அவரை சந்தித்துள்ளார். அதைத் தொடர்ந்து இன்று மகாராஷ்டிர ஆளுநரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் பவார். இந்த இரண்டு சந்திப்புகளின் பின்னணியும் தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா இடையிலான மோதல் போக்கின் வெளிப்பாடே என்று தகவல் ஒரு பக்கம் உலவிக் கொண்டிருக்கிறது. 

இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிராதான். இந்த நெருக்கடியால் தேசியவாத காங்கிரஸுக்கும் சிவசேனாவுக்கும் இடையில் பல்வேறு விஷயங்களில் மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. 

குறிப்பாக சரத் பவார், கொரோனா வைரஸ் தொற்றால் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கக் கூடாது என்றும், பொருளாதார நடவடிக்கைகளுக்கு தளர்வு அளிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் முதல்வர் உத்தவ் தாக்கரே, தொடர்ந்து முழு முடக்க நடவடிக்கையில் தளர்வு இருக்கக் கூடாது என்று நினைக்கிறார். இதனால் இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

ஆளுநர் உடனான சந்திப்பை அடுத்து சரத் பவார், “ஆளுநரை சந்தித்தது சாதாரணமாகத்தான். மகாராஷ்டிர அரசுக்கு எந்த வித நெருக்கடியும் இல்லை. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எங்களுடன்தான் உள்ளனர். பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் பொறுமை இழந்து வருகிறார்,” என்று குத்தலாக பாஜகவை சாடி கருத்து தெரிவித்தார். 

சிவசேனா தரப்பும் இந்த விவகாரம் பற்றி கருத்து தெரிவித்துள்ளது. அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான சஞ்சய் ராவத், “சரத் பவாரும் உத்தவ் தாக்கரேவும் சுமார் ஒன்றரை மணி நேரங்களுக்குப் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர். யாராவது மகாராஷ்டிர அரசு ஸ்திரமாக இல்லை என்று வதந்தி பரப்பினால் அது அவர்களின் வயிற்றெரிச்சலாகவே இருக்கும். அரசு மிக வலுவாக உள்ளது. கவலை வேண்டாம். ஜெய் மகாராஷ்டிரா!!” என்று ட்விட்டர் மூலம் கருத்திட்டுள்ளார். 

ராகுலின் கருத்து பற்றி சரத் பவாரின் மகளான சுப்ரியா சுலே, “ராகுல் என்ன சொன்னார் என்பதை நானும் கேட்டேன். அவர் சொன்னது சரிதான். நாங்கள் கூட்டணியில் உள்ளோம். இங்கு அனைவரும் கலந்துதான் ஒரு முடிவை எடுக்கிறோம். உத்தவ் தாக்கரே ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னர் அனைவரையும் கலந்தாலோசித்துதான் முடிவெடுக்கிறார். அனைத்துக் கட்சிகளுக்கும் கூட்டணியில் சம உரிமை உள்ளது,” என்று ஸ்திரமாக கூறியுள்ளார். 

பாஜக தரப்போ, “தங்கள் கூட்டணியில் இருக்கும் இரு கட்சிகள் குறித்து ராகுல் காந்தி இப்படி சொல்லியிருப்பது மகாராஷ்டிர மக்களை கேலிக்குரியவர்களாக மாற்றியுள்ளது” என்று விமர்சித்துள்ளது. 


 

.