This Article is From Oct 25, 2019

“இது வழங்கப்பட்டது வெற்றி அல்ல… பெறப்பட்டது…”- இடைத் தேர்தல் முடிவுகளால் கொதிக்கும் Congress!

Taminadu By-election - "பொதுவாக இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் சமநிலைத் தன்மை இல்லாத நிலை இருக்கிறது."

“இது வழங்கப்பட்டது வெற்றி அல்ல… பெறப்பட்டது…”- இடைத் தேர்தல் முடிவுகளால் கொதிக்கும் Congress!

Taminadu By-election - "ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரபலம், பணபலம் கூடுதலாகவே இருக்கிறது."

Taminadu By-election - தமிழகத்தில் காலியாக இருந்த சட்டமன்றத் தொகுதிகளான விக்கிரவாண்டி (Vikravandi) மற்றும் நாங்குநேரிக்கு (Nanguneri), கடந்த 21 ஆம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இரு தொகுதிகளிலும் ஆளுங்கட்சியான அதிமுக-வே (ADMK) தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. விக்கிரவாண்டியில் திமுக-வும், நாங்குநேரியில் திமுக (DMK) கூட்டணியில் இருந்த காங்கிரஸும் (Congress) போட்டியிட்டன. இரண்டு தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் இரண்டாம் இடத்தையே பிடிக்க முடிந்தது. இந்நிலையில், தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி (K.S.Alagiri), குமுறியுள்ளார்.

“நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறாதது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. ஜனநாயகத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடத்தி முடித்திருக்கிற தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை இடைத் தேர்தல்களில் எதிர்கட்சிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லாத நிலை உருவாகி வருகிறது. 

பொதுவாக இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் சமநிலைத் தன்மை இல்லாத நிலை இருக்கிறது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரபலம், பணபலம் கூடுதலாகவே இருக்கிறது. இதை எதிர்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாத நிலையில் தான் இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சியான அதிமுக வெற்றி பெற்று விடுகிறது. இத்தைகய வெற்றிகள் மக்களின் உண்மையான மனநிலையை பிரதிபலிப்பதாக கருத முடியாது. இடைத் தேர்தல்கள் எப்படி நடத்தப்படுகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். 

எனவே, இடைத் தேர்தல்களில் ஏன் வெற்றி பெறவில்லை என்பதை காங்கிரஸ் கட்சியினரும் தமிழக மக்களும் புரிந்து கொள்வார்கள். 2016 நாங்குநேரி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 17,315 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 2019 மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் ஞானதிரவியத்திற்கு நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் 34,710 வாக்குகள் கூடுதலாக கிடைத்தது. 

இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளருக்கு மிக சாதகமான சூழல் அமைந்திருந்தது. காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் அமோக ஆதரவுடன் வெற்றி பெறுவார் என அனைவருடைய எதிர்பார்ப்பும் இருந்தது. இந்நிலையில் ஆளுங்கட்சியின் வெற்றி என்பது வழங்கப்பட்டது அல்ல, பல்வேறு உத்திகளினால் பெறப்பட்டது என்பதை கூற கடமைப்பட்டிருக்கிறேன்,” என்று எடுத்துக் கூறியுள்ளார் கே.எஸ்.அழகிரி.

.