This Article is From Aug 17, 2019

தொடர் மழை: வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. இரவு தொடங்கிய விடிய விடிய கொட்டியது. இதனால், நகரின் முக்கிய  சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.

தொடர் மழை: வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

வேலூரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். 

தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்வதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விடிய விடிய கனமழை பெய்தது. 

சென்னையில்  கிண்டி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர், மடிப்பாக்கம், ஆலந்தூர், நங்கநல்லூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அயனாவரம், ராமாபுரம், பூவிருந்தவல்லி உள்ளிட்ட இடங்களில் இரவு நேரத்திலும் மழை கொட்டியது. இன்று காலையும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இதேபோல, திருவண்ணாமலை, விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் சில பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் மழை பெய்தது. புதுச்சேரியிலும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது

வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. இரவு தொடங்கிய விடிய விடிய கொட்டியது. இதனால், நகரின் முக்கிய  சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக வேலூர் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவித்துள்ளார்.

.