This Article is From Apr 20, 2020

அண்ணா கார்ட்டூன் விவகாரம்... தினத்தந்திக்கு வலுக்கும் எதிர்ப்பு!

அறிஞர் அண்ணா குறித்து, தமிழின் முன்னணி நாளிதழான தினத்தந்தியில் இன்று வெளியான கார்ட்டூன் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அண்ணா கார்ட்டூன் விவகாரம்... தினத்தந்திக்கு வலுக்கும் எதிர்ப்பு!

சமூக வலைதளங்களில் தினத்தந்தியை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

அறிஞர் அண்ணா கார்ட்டூன் விவகாரத்தில் தமிழகத்தின் முன்னணி நாளிதழான தினத்தந்திக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் தினத்தந்தி மன்னிப்பு கேட்கக்கோரி சமூக வலைதளத்தில் ஹேஷ் டேக்குகள் ட்ரெண்டாகியுள்ளன.

அறிஞர் அண்ணா குறித்து, தமிழின் முன்னணி நாளிதழான தினத்தந்தியில் இன்று வெளியான கார்ட்டூன் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

p>இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஸ்டாலின் தனது பதிவில், “தினத்தந்தி” நாளிதழில் இன்று வெளியாகியுள்ள கார்ட்டூனில், பேரறிஞர் அண்ணா அவர்களுடைய திருவுருவச் சிலையின் தலையை மறைத்து, கொரோனா வைரஸ் சித்திரத்தை வரைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாடு என்று இந்த மாநிலத்திற்குப் பெயர்சூட்டி, இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு கண்ட பேரறிஞர் அண்ணாவைப் பெருமைப்படுத்தும் வகையில் நிறுவப்பட்ட சிலையை, சிறுமைப்படுத்தும் இத்தகைய கார்ட்டூனை பாரம்பரியமிக்க தினத்தந்தி நிர்வாகம் அனுமதித்திருப்பது வேதனைக்குரியதாகும்.

“வெல்க தமிழ்” என்று இலச்சினையில் வைத்துக் கொண்டு, தமிழ்மொழியின் மறுமலர்ச்சிக்குக் காரணமான பேரறிஞர் அண்ணா அவர்களைக் கொச்சைப்படுத்தும் கார்ட்டூனை வெளியிட்டிருப்பது தினத்தந்திக்குச் சிறிதும் சிறப்பு சேர்க்காது!

தினத்தந்தியைத் தோற்றுவித்த அய்யா சி.பா.ஆதித்தனார் அவர்களைக் கவுரப்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா. கார்ட்டூன் வரைந்தவர் மூளையிலும், தினத்தந்தியின் மனதிலும் கொரோனா தொற்று புகுந்து விட்டதோ என்றுதான், கார்ட்டூனைப் பார்ப்போர் ஐயுறுவர்!
மேலும், 19ம் தேதி வெளியான கருத்துப்படத்திலும், களங்கம் கற்பிக்கும் எண்ணத்துடன் கழகத்தின் பெயர் திரிக்கப்பட்டு, கழக வரலாற்றையே அறியாத ஒருவரால் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது.

கார்ட்டூன், கருத்துப்படம், கேலிச்சித்திரம் வரைய இருக்கும் உரிமையை நான் மறுக்கவில்லை; அவை அடுத்தவரைப் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது; யாரையும் கொச்சைப்படுத்துவதாகவும் இருக்கக் கூடாது; எவரையும் அவமானப்படுத்துவதாகவும் இருக்கக்கூடாது.

நான் சுட்டிக்காட்டிய இரண்டும் இதழியல் அறத்துக்கு உட்பட்டதல்ல!

கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. அது ஒருவழிப்பாதையாகவும் பொறுப்பற்றதனமாகவும் போய்விடக் கூடாது. சம்பந்தப்பட்ட அனைவரும் இதை நினைவில் கொண்டு, இதழியல் பண்பாட்டினைப் பாதுகாத்திட வேண்டும் என விரும்புகிறேன்.”

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது- 

கொரோனா விழிப்புணர்வு என்ற பெயரில் இன்று தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ள கார்ட்டூன், பேரறிஞர் அண்ணா அவர்களை இழிவுபடுத்துவதாக உள்ளது. தமிழக மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்கின்ற பேரறிஞர் அண்ணா போன்ற ஆளுமைகளை எந்தக் காரணத்தைச் சொல்லியும் இப்படி அவமதிப்பது சரியல்ல.தமிழர் தந்தை என்று போற்றப்படும் சி.பா.ஆதித்தனார் அவர்களால் தொடங்கப்பட்ட தினத்தந்தி நிர்வாகம், இதற்காக வருத்தம் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

.