குக்கர் சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பால் எந்த பின்னடைவும் இல்லை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என அமமுக துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் மாதம் உயிரிழந்தார். இதையடுத்து அதிமுக சசிகலா, தினகரன் அணி – ஓபிஎஸ் இபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. இதில் இரட்டை இலை சின்னமும், அதிமுக கட்சிப் பெயரும் ஓபிஎஸ்-இபிஎஸ் அணிக்கு தலைமை தேர்தல் ஆணையம் வழங்கியது.
இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரையில், அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் வழங்குவது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
மேலும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் உள்ள இரட்டை இலை சின்னம் வழக்கை 4 வாரங்களுக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஒரு வேளை 4 வாரங்களுக்குள் இரட்டை இலை வழக்கில் தீர்ப்பு வழங்காத பட்சத்தில், தேர்தல் அறிவிப்பு ஏதேனும் வந்தால், அந்த தேர்தலை கருத்தில் கொண்டு தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், குக்கர் சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பால் எந்த பின்னடைவும் இல்லை.
குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைக்கும். சின்னம் பெரிய விஷய மல்ல. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். மக்கள் தேர்தல் சின்னத்தை வைத்து மட்டும் வாக்களிக்கவில்லை. மக்களுக்கு யார் சேவை செய்கிறார்களோ அவர்களுக்குதான் வாக்களிக்கிறார்கள்.
சின்னம் என்பது பெரியவிஷயம் கிடையாது. மக்களுக்கு சேவை செய்யும் எங்களை போன்ற வேட்பாளர்களுக்குத்தான் வாக்களித்து வெற்றி பெற வைப்பார்கள். குக்கர் சின்னம் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் முறையிட்டுள்ளோம். அந்த சின்னம் எங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.