கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது. இதற்கான உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் மார்ச் 27-ம்தேதி 10-ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கப்படுவதாக இருந்தது. இந்த தேர்வு ஏப்ரல் 14-ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
அதே நேரத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறுகின்றன. இந்த தேர்வுகளையும் ஒத்தி வைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
இதேபோன்று 1 முதல் 9-ம் வகுப்பு வரை நேரடியாக தேர்ச்சி அளிக்க உத்தரவிட வேண்டும் என்று சட்டப்பேரவையில் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையை பொறுத்தளவில், மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடக்கூடாது என்பது முக்கிய அறிவுறுத்தலாக உள்ளது. தொற்று நோய் என்பதால், மாணவர்கள் பள்ளிக்கு வரும்போதோ அல்லது தேர்வு அறையில் அமர்ந்திருக்கும்போது நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.
இதனால் அனைத்து விதமான தேர்வுகளையும் ஒத்தி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
நேற்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நாட்டின் உயர் கல்வி நிலையங்களான ஐஐடி, ஐஐஎம் களில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில் தமிழகத்தில் அனைத்து பள்ளித் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.