This Article is From Mar 24, 2020

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18-ஆக உயர்வு!!

புதிதாக 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் நாடு 21 நாட்கள் ஊரடங்கை இன்று நள்ளிரவு முதல் எதிர்கொள்ளவுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18-ஆக உயர்வு!!

தமிழகம் இன்று 144 தடை உத்தரவை மாநில அளவில் அமல்படுத்தியுள்ளது.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
  • பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18-ஆக உயர்வு
  • மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது

தமிழகத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 18-ஆக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பதிவில், 'சென்னையில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் 65 வயதுடையவர். அவர் நியூசிலாந்திலிருந்து சென்னை திரும்பிய அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னொருவர் 55 வயதுடைய பெண். சைதாப்பேட்டையைச் சேர்ந்த அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்னொருவர் லண்டனிலிருந்து திரும்பி வந்த 25 வயது இளைஞர். அவர் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த மூன்று பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்குச் சிகிச்சை வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது' என்று கூறியுள்ளார். 

ஏற்கனவே 12 பேருக்குப் பாதிப்பு இருந்த நிலையில், இன்று மதியம் மேலும் 3 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில், இன்று மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 1-ம்தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு இருக்கும் என்று அறிவித்தார். இதைச் செய்யாவிட்டால் பேரிழப்பை நாம் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். 

ஊரடங்கு அமலிலிருந்தபோதிலும், அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

மருந்தகம், மருத்துவமனை, காய்கறி கடைகள், பால் மையங்கள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்டவை செயல்படுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. 

.