This Article is From Mar 31, 2020

''அடுத்த 3 மாதங்களுக்கு, கடன்களுக்கான இ.எம்.ஐ. வசூலிக்கப்படாது'' - நிதித்துறை செயலர் தகவல்!!

மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள ஊரடங்கு நடவடிக்கையால் தொழில் நிறுவனங்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பொருளாதார சிக்கல் அனைத்து தரப்பினரையும் எதிர்கொண்டுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Written by

ஊரடங்கு உத்தரவு வரும் 14-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Highlights

  • கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு செயல்படுத்தப்படுகிறது
  • பொருளாதார ரீதியாக அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • அடுத்த 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ. கேட்கக் கூடாதென வங்கிகளுக்கு உத்தரவு

கொரோனா பாதிப்பால் மக்கள் பொருளாதார சிக்கலில் தவித்து வரும் நிலையில் அடுத்த 3 மாதங்களுக்கு கடன்களுக்கான மாதாந்திர இ.எம்.ஐ.யை வங்கிகள் வசூலிக்காது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.


மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள ஊரடங்கு நடவடிக்கையால் தொழில் நிறுவனங்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பொருளாதார சிக்கல் அனைத்து தரப்பினரையும் எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையில் தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் செய்தியாளர்களை  இன்று சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

அடுத்த 3 மாதங்களுக்கு கடன்களுக்கான இ.எம்.ஐ. மற்றும் வட்டி வசூலிக்கப்படாது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட உத்தரவு, அந்தந்த வங்கிகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.  வங்கி வாடிக்கையாளர்கள் அதனை படித்து தெரிந்து கொள்ளலாம்.  இதுபற்றி அனைத்து வங்கிகளுக்கும் மீண்டும் ஒரு முறை அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisement

இவ்வாறு அவர் தெரிவித்தார். இதேபோன்று தமிழக முதல்வரும் இன்று புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட உயர் அதிகாரிகள் கொண்ட பல்வேறு குழுக்களுடன் நேற்றைய தினம்
(30.3.2020) கலந்தாய்வு செய்த பின்னர், இன்று உயரதிகாரிகளுடன் ஆலோசித்து தமிழ்நாட்டு மக்களின் நன்மை கருதி, கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கின்றேன்

1. கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு (30.6.2020 வரை) நீட்டிக்கப்படுகிறது.

Advertisement

2. வீட்டுவசதி கூட்டுறவு சங்கங்களுக்கு தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

3. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

Advertisement

4. அனைத்து மீனவ கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களிலிருந்து பெறப்பட்ட கடனுதவிகளுக்கான தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

5. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் கடன் பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தவணைகளைச் செலுத்த
மூன்று மாத கால அவகாசம் (30.6.2020 வரை) வழங்கப்படுகிறது.

Advertisement

6. ‘கரோனா நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம்' என்ற சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு கடனுதவித் திட்டம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திடம் கடனுதவி பெற்றுள்ள 2,000 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அவசர மூலதனத் தேவைகளுக்காக செயல்படுத்தப்படும்.

7. சிப்காட் நிறுவனத்திடம் மென்கடன் பெற்றுள்ள தொழில் நிறுவனங்கள் கடன் தவணை செலுத்த மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.

Advertisement

8. சிப்காட் தொழில் பூங்காவில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் பராமரிப்புக் கட்டணம் செலுத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.

9. மோட்டார் வாகனச் சட்டப்படி உரிமங்கள் மற்றும் வாகன தகுதிச் சான்றுகள் புதுப்பிக்கப்பட வேண்டிய கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

10. எடைகளும், அளவைகளும் சட்டம், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், உள்ளாட்சி அமைப்புகளினால் அமல்படுத்தப்படும் கேடும் குற்றமும் பயக்கும் தொழிற்சட்டம் ஆகியவற்றின் கீழ் புதுப்பிக்கப்பட வேண்டிய உரிமங்களின் கால அவகாசம் 3  மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

11. உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் போன்றவை செலுத்துவதற்கான கால அவகாசம் 3
மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

12. தற்போது உள்ள சூழ்நிலையில், வாடகை வீடுகளில் குடியிருப்போர் வாடகை செலுத்துவதில் உள்ள சிரமங்களை அரசின் கவனத்திற்கு  கொண்டு வந்துள்ளனர். எனவே, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான வீட்டு வாடகைத் தொகையை இரண்டு மாதங்கள் கழித்து பெற்றுக்
கொள்ள வேண்டும் என்று வீட்டு உரிமையாளர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு கரோனா வைரஸ் தொற்றினை தடுப்பதற்காக 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதே சமயத்தில், இந்நோய்த் தொற்று இரண்டாம் கட்டத்தில் இருப்பதாகவும், அது மூன்றாம் கட்டத்திற்குப் பரவாமல் இருக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து, தங்கள் வீட்டிலேயே இருப்பது மிகவும் அவசியம் என்று நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

எனவே, அத்தியாவசியப் பொருட்களை வாங்க அரசு பிறப்பித்துள்ள நேரக் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மேலும், எந்தவிதமான வதந்திகளை நீங்கள் நம்ப வேண்டாம். வதந்திகள் பரப்புவோர் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

எனவே, உங்களின் நன்மைக்காகவும், உங்கள் குடும்பத்தின் நன்மைக்காகவும், நம் நாட்டின் நன்மைக்காகவும், பொதுமக்கள் அனைவரும்
அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Advertisement