ஹைலைட்ஸ்
- பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள்
- நிதி தரப்படும் தொகைக்கு 100 சதவீதம் வருமான வரி
- வங்கி இணைய சேவை, கடன் அட்டை மூலமாக செலுத்தலாம்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிவாரண நிதி அளிக்கும்படி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. தற்போது உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் நோயை உயிர்க்கொல்லி தோற்று நோய் என அறிவித்துள்ளது. அதே போன்று மத்திய அரசும் கொரோனா வைரஸை பேரிடர் தடுப்பு நோயாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டு மக்களிடம் இருந்து பெறப்படும் நிவாரணத்திற்கும் விலக்கு அளிக்கப்படும். முதல்வர் நிவாரண நிதிக்குத் தரப்படும் தொகைக்கு 100 சதவீதம் வருமான வரி விலக்கு உண்டு. ஏழை, எளிய மக்களைக் கஷ்டத்திலிருந்து மீட்க மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து உதவி செய்யவேண்டும்.
ரூ.10 லட்சத்திற்கு மேல் நிதி உதவி செய்யும் நபர்கள், நிறுவனங்களின் பெயர்கள் பத்திரிகை செய்தியாக வெளியிடப்படும். முதலமைச்சர் நிவாரண நிதிக்குப் பெறப்படும் அனைத்து நன்கொடைகளுக்கும் உரிய ரசீதுகள் தரப்படும். நன்கொடைகளை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் மின்னணு மூலமாக வழங்கலாம். சென்னை தலைமைச் செயலக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் செலுத்தலாம்.
வங்கி இணையச் சேவை, கடன் அட்டை மூலமாகச் செலுத்தலாம். மின்னணு மூலம் பரிவர்த்தனை செய்ய இயலாதவர்கள் குறுக்கு கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக அனுப்பலாம். தற்போதைய நிலையில் முதல்வரை நேரில் சந்தித்து நன்கொடை வழங்க வேண்டாம் என்று அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.