This Article is From Apr 27, 2020

வியாபாரிக்கு கொரோனா: கோயம்பேடு மார்க்கெட்டை 3 ஆக பிரிக்க திட்டம்!

வியாபாரிகள் சந்தையை 3 ஆக பிரிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

வியாபாரிக்கு கொரோனா: கோயம்பேடு மார்க்கெட்டை 3 ஆக பிரிக்க திட்டம்!

வியாபாரிக்கு கொரோனா: கோயம்பேடு மார்க்கெட்டை 3 ஆக பிரிக்க திட்டம்!

ஹைலைட்ஸ்

  • கோயம்பேடு மார்க்கெட்டை 3 ஆக பிரிக்க திட்டம்!
  • வியாபாரிகள் சந்தையை 3 ஆக பிரிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு
  • ஆம்னி பேருந்து நிலையத்தில் சந்தை நடத்த வியாபாரிகள் கோரிக்கை

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதை தொடர்ந்து, மார்க்கெட்டை 3 ஆக பிரிப்பது குறித்து காவல் ஆணையர் விஸ்வநாதன் அங்குள்ள வியாபாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.  

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 27,892ஆக உயர்ந்துள்ளது. மேலும், உயிரிழப்பு எண்ணிக்கையானது 872 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதேபோல், தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 1,885 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் 24 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. இதனிடையே, கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு, மே 3-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

எனினும், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கட்டுப்பாடுகளுடன் செயல்பட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் கோயம்பேடு காய்கறி சந்தை தினந்தோறும் செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

இதற்கிடையே, கோயம்பேடு வியாபாரிக்கு ஒருவருக்கும், கோயம்பேட்டில் சலூன் கடை வைத்துள்ள ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்த 2 பேரும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கோயம்பேடு காய்கறி சந்தையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை என புகார் வந்த நிலையில், மார்க்கெட்டை 3 ஆக பிரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சந்தையில் உள்ள 3,100 கடைகளையும் 3 பங்காக பிரித்து கோயம்பேடு, கேளம்பாக்கம், மாதாவரம் பகுதிகளில் சந்தைகள் நடத்த அரசு திட்டமிட்டது. 

அதற்காக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் சந்தை வியாபாரிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வியாபாரிகள் சந்தையை 3 ஆக பிரிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கோயம்பேடு மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்தில் சந்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

தொடர்ந்து, பேசிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கோயம்பேட்டில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், சந்தையை மூட வேண்டிய அவசியம் வரும் என்றார். மேலும், இடமாற்றம் குறித்த பேச்சுவார்த்தையில் இன்று முடிவு எட்டப்படாததால், நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

.