நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த 14-ம் தேதி மூன்றாவது முறையாக முழு முடக்க(LOCKDOWN) நடவடிக்கை நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டதிலிருந்து தொற்று பரவல் எண்ணிக்கையானது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் 1,58,333 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 86,110 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை 67,692 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல 4,531 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,566 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 194 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று பதிவு செய்யப்பட்ட இறப்பு எண்ணிக்கையானது, தற்போது வரை பதிவு செய்யப்பட்ட இறப்புகளில் இரண்டாவது பெரிய எண்ணிக்கையாகும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த புதன் கிழமை இந்தியா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையாக 1.5 லட்சம் என்ற அளவினை பதிவு செய்திருந்தது. இந்நிலையில் உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா பத்தாவது இடத்தில் இருந்து வருகிறது. மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட முழு முடக்க நடவடிக்கையானது வருகிற ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகின்றது. இந்த முறை மீண்டும் முழு முடக்கம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இன்னும் எந்த தகவலும் வெளிவரவில்லை.
- பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம், 60 நாட்கள் அமல்படுத்தப்பட்ட முழு முடக்க நடவடிக்கையை மறு பரிசீலனைக்கு உட்படுத்துகிறது. கடந்த மார்ச் மாதம் 25 அன்று அமல்படுத்தப்பட்ட முழு முடக்க நடவடிக்கை “மக்கள் ஊரடங்கு“ என அழைக்கப்பட்டது. பின்னர் சிறிது சிறிதாக தளர்வுகளை மத்திய அரசு அனுமதித்தது. மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று பின்னர் இந்த தளர்வுகள் அனுமதிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக முழு முடக்க நடவடிக்கை நீட்டிக்கப்பட்டபோது கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர மற்ற பகுதிகளில் பரவலான தளர்வுகள் அனுமதிக்கப்பட்டது. தளர்வுகளின் ஒரு பகுதியாக உள்நாட்டு விமான போக்குவரத்தும் தொடங்கப்பட்டது. தளர்வுகளுக்கு பின்னர் தொற்று பாதிப்பு இரு மடங்காக உயர்ந்துள்ளதாக தரவுகள்(DATA) தெரிவிக்கின்றன.
- புலம் பெயர் தொழிலாளர்களின் பிரச்சனைகள் மற்றும் துயரங்களை போக்க மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து இன்று விசாரணை நடைபெற உள்ளது. முன் அறிவிப்பு இல்லாமல் நடைமுறைப்படுத்தப்பட்ட முழு முடக்க நடவடிக்கை காரணமாக புலம் பெயர் தொழிலாளர்கள் நாட்டின் நெடுஞ்சாலைகளை குறுக்கும் நெடுக்குமாக நடந்து தங்கள் கிராமங்களை சென்று சேர்ந்தனர். பலர் வழிலேயே மரணித்தனர். நேற்று பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில், உணவு மற்றும் தண்ணீர் இன்றி உயிரிழந்த புலம் பெயர் தொழிலாளிகளின் குழுவை சேர்ந்த தாயை எழுப்ப முயலும் குழந்தையின் வீடியோ புலம் பெயர் தொழிலாளர்களின் துயரத்தை பொது சமூகத்திற்கு உணர்த்தியது.
- முன் அறிவிப்பு இல்லாமல் நடைமுறைப்படுத்தப்பட்ட முழு முடக்க நடவடிக்கையின் காரணமாக நாடு முழுவதும் 122 மில்லியன் மக்கள் வேலையிழந்துள்ளதாக இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் புளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், சிறு குறு தொழில்களை நம்பியிருந்த தினக்கூலி தொழிலாளிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டதாக அறிவித்துள்ளது. ஐ.நாவின் ஆய்வுப்படி 104 மில்லியன் இந்தியர்கள் நாளொன்றுக்கு 3.2 டாலருக்கும் குறைவான வருமானைத்தை பெறுவார்கள் என கணித்துள்ளது. இது உலக வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தப்பட்ட கூலியை விடவும் குறைவான அளவாகும். இதன் காரணமாக வறுமையின் விகிதமானது 60 சதவிகிதத்திலிருந்து 68 சதவிகிதமாக அதிகரிக்கும் என தெரியவருகிறது.
- தேசிய தலைநகர் டெல்லியை பொறுத்த அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 15 ஆயிரத்தினை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 792 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது முன்னெப்போதும் இல்லாத அளவாகும். இதுவரை மொத்தமாக 15,257 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 303 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தை பொறுத்த அளவில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 18 ஆயிரத்தினை கடந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவில் கடந்த புதன் அன்று மாநிலம் முழுவதும் 817 பேர் பாதிக்கபட்டதாக சுகாதார துறை அறிவித்தது. இதில் 138 பேர் மகாராஷ்டிராவில் இருந்து திரும்பியவர்களாவார்கள். இதுவரை 133 பேர் மாநிலம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்களை பொறுத்த அளவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 162 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதன் மூலமாக ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 1,921 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 26 பேர் உயர்ந்துள்ளனர். தற்போது ஜம்முவில் 288 பேரும், காஷ்மீரில் 753 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றை எதிர்கொண்டு இருக்கும் நிலையில், அசாம் மாநிலம் வெள்ளத்திலிருந்து மீள்வதற்கான முயற்சியினை மேற்கொண்டு வருகின்றது. கோல்பாரா மாவட்டத்தில் 2.15 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 16 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள வெள்ள நிவாரண முகாம்களில் கொரோனா தொற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால் மாநில நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றால் 774 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு இம்மாத தொடக்கத்தில் 20 லட்சம் கோடி ஊக்கத்தொகையினை அறிவித்திருந்த நிலையில், அரசு மாநிலங்களுக்கு கூடுதலதா 1.5 லட்சம் கோடி வரை கடன் கொடுக்க வேண்டிய நிலை வரும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வங்கி மறு மூலதனமாக்கலுக்காக சுமார் 25,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அரசு குறிப்பிட்டிருந்தது. ஆனால், இந்த தொகையானது கணிசமாக தற்போது உயர்ந்துள்ளது.
உலக வல்லரசான அமெரிக்காவில் தற்போது கொரோனா தொற்றால் 17 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி AFP செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் பிரேசில் அதிக அளவில் இறப்புகளை பதிவு செய்துள்ளது. இந்நாட்டில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் 24,512 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் வூகான் மாகாணத்தில் ஒரு உயிரியல் பரிசோதனைக் கூடத்திலிருந்துதான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது என அமெரிக்கா தொடர்ந்து கூறி வந்த நிலையில் சீனா அதனை மறுத்து வந்தது. வூகானில் உள்ள விலங்குகள் சந்தையிலிருந்து வைரஸ் பரவியிருக்கலாம் என சில கருத்துக்கள் முன்னிறுத்தப்பட்டாலும், அதற்கான ஆதாரங்கள் இல்லை. எனினும் இது மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு பரவ வாய்ப்பிருந்த ஒரு இடமாக வூகான் விலங்கு சந்தை இருந்தது என ஒரு சீனா ஆராய்ச்சியாளர் குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளார்.