இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில், கொரோனா வைரஸால் 3,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 195 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, ஒட்டுமொத்தமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 46,433 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் 1,568ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 12,727 பேர் குணமடைந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி, குணமடைபவர்களின் எண்ணிக்கை 27.4 சதவீதமாக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த மார்ச்.25ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் தொடர்ந்து, 3வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து, அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளிலும் நேற்று முதல் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம், புதிதாக 2,573 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 83 பேர் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமையன்று, 2,487 பேர் பாதிக்கப்பட்டனர்.
நாட்டில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில், நேற்று ஒரே நாளில் 1,567 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 35 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், புதிதாக 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் நேற்று மட்டும் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
எதிர்கட்சிகளின் கடுமையான விமர்சனத்தை தொடர்ந்து, புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிப்பதாக நாங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களில் கோரிக்கைகளின் அடிப்படையில், சிறப்பு ரயில்களை இயக்க அனுமதி அளித்துள்ளோம்.
அதன்படி, கட்டணங்களையும் 85 -15 சதவீதமாக பிரித்துள்ளோம். நாங்கள் புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து ரயில் கட்டணத்தை வசூலிக்க மாநிலங்களை நிர்பந்திக்கவில்லை என்று சுகாதார அமைச்சக இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மே.3ம் தேதிக்கு பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வுகள், ஊரடங்கு நீட்டிப்பு போல் இல்லை என்றும், ஊரடங்கை நீக்கியது போல் தான் உள்ளது. அதனால், அதனை லாக்டவுன் 3.0 என்று கூறாமல், லாக்டவுன் நீக்கம் 2.0 என்று தான் கூற வேண்டும் என்றும் லாவ் அகர்வால் கூறினார்.
40 நாட்களுக்கு பின்னர் நேற்றைய தினம் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், டெல்லி, மேற்குவங்கம் மற்றும் ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மதுப்பாட்டில்களின் விலைகளை உயர்த்தியது. தொடர்ந்து, மது பாட்டில்களை வாங்குவதற்கு மதுக்கடைகள் முன்பு பெரும் வரிசை நின்றதால், சமூக விலகல் என்பது கேள்விக்குறியானது.
உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250,000 ஆக அதிகரித்துள்ளது. இதில், அமெரிக்காவில் தான் 68,689ஆக அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதேபோல், ஐரோப்பா கண்டமும் கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. அதன்படி அங்கு 145,023 பேர் உயிரிழந்துள்ளனர்.