தரம் குறைந்த சீன ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் அந்நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படும் என்றும் இதனால் ஒரு ரூபாய் கூட இழப்பு ஏற்படாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ரேபிட் கிட் தொடர்பாக கடந்த சில நாட்களாக சர்ச்சை வெடித்து வந்த நிலையில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பை விரைந்து கண்டறிவதற்காக சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் லட்சக்கணக்கில் இறக்குமதி செய்யப்பட்டன. இவை தமிழகம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. தமிழகமும் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை சீனாவிலிருந்து ஆர்டர் செய்திருந்தது.
இந்த கருவிகளால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்ய முடியாது. ஆனால், கொரோனா பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டால் அவரது உடலில் அதனை எதிர்க்கும் சக்தி உருவாகி விடும். இது உருவாகி விட்டதா இல்லையா என்பதை ரேபிட் கிட் தெரியப்படுத்தும். எதிர்ப்பு சக்தி உருவாகி விட்டது என்றால் சம்பந்தப்பட்டவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அர்த்தம்.
இந்த நிலையில், ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் தரம் அற்றவையாக உள்ளதென ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் ஆதாரப்பூர்வமாக தகவல்களை வெளியிட்டன. அதிகபட்சம் 6 சதவீதம் வரைதான் இந்த கருவிகள் துல்லியத் தன்மை கொண்டவை என விமர்சனங்கள் எழுந்தன. இதனால் மத்திய அரசு மீதான அழுத்தம் அதிகரித்தது.
இந்த நிலையில், சின நிறுவனங்களான குவாங்சு ஒன்போ பயோடெக் மற்றும் ஜுஹாயின் லிவ்சோன் டயனோஸ்டிக்ஸ் ஆகிய 2 நிறுவனங்களிடம் வாங்கப்பட்ட கருவிகள் தரமற்றவை என மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனங்களிடம் ஆர்டர் செய்யப்பட்ட கருவிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வகையில் இந்தியாவுக்கு ஒரு ரூபாய் கூட இழப்பு ஏற்படாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தரம் குறைந்தவை என புகார்கள் எழுந்தபோது, ரேபிட் டெஸ்ட் கிட்டால் பரிசோதிப்பதை நிறுத்திக் கொண்டு பி.சி.ஆர். கருவிகள் மூலம் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியிருந்தது.
கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி, சீனாவுக்கான இந்தியத் தூதர், விக்ரம் மிஸ்ரி, சீனாவிலிருந்து 6,50,000 ரேபிட் டெஸ்ட் கருவிகள் மற்றும் ஆர்என்ஏ எக்ஸ்டிராக்ஷன் கிட்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ட்விட் செய்தார்.
இந்த சோதனைக் கருவிகளை, Matrix என்னும் நிறுவனம்தான், சீனாவிடமிருந்து ஒரு கருவி தலா 245 ரூபாய்க்கு வாங்கியுள்ளது. அதே நேரத்தில் விநியோகஸ்தர்களான Real Metabolics மற்றும் Aark Pharmaceuticals நிறுவனங்கள், அதே கருவியை மத்திய அரசுக்கு, 600 ரூபாய்க்கு விற்றுள்ளன. இது கிட்டத்தட்ட 60 சதவிகித விலையேற்றமாகும்.