டெல்லி கன்டோன்மென்ட்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, சேவையில் உள்ள ராணுவ வீரர்கள், ஒய்வு பெற்ற ராணுவ வீரர்கள் உட்பட 24 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அவர்கள் வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் ராணுவ மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவில் இருந்தவர்கள் என்று டெல்லி கன்டோன்மென்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சுகாதார பணியாளர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய ராணுவத்தில் கடந்த மார்ச் மாதத்தில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, நாட்டின் பிற பாதுகாப்புப் படையினருடன் சேர்ந்து கொடிய வைரஸ் பரவலுக்கு எதிராக பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில், கொரோனா வைரஸால் 3,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 195 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, ஒட்டுமொத்தமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 46,433 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் 1,568ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 12,727 பேர் குணமடைந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி, குணமடைபவர்களின் எண்ணிக்கை 27.4 சதவீமாக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.