உத்தர பிரதேசத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வரும் நிலையில், அவர்களால் அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பாஸ்தி மாவட்டத்தில் சொந்த ஊர் திரும்பிய 50 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 104ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் நிரஞ்சன் கூறும்போது, கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பாஸ்தி மாவட்டத்திற்கு சமீபத்தில் வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவார்கள். பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதால் பொதுமக்கள் பயப்பட வேண்டாம். கொரோனா வைரஸின் தொடர்பை கண்டறிய சோதனை அளவு அதிகப்படுத்தப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. சரியான நேரத்தில் நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவல் சங்கிலியை உடைக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் இருந்து கடந்த வாரம் புலம்பெயர் தொழிலாளர்கள் பாஸ்திக்கு திரும்பினர். அவர்கள் மகாராஷ்டிராவில் எங்கெல்லாம் சென்றார்கள் என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 50 பேரும் கொரோனா சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, சுகாதாரத்துறை செயலாளர் அமித் மோகன் பிரசாத் கூறும்போது, அதிகளவில் மாநிலத்திற்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள தனிமைப்படுத்தல் மையங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவர்களுக்கு அறிகுறி இல்லையென்றால், 21 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு அனுப்பப்படுகின்றனர். அவர்களுக்கு அறிகுறி இருந்தால், தொடர்ந்து, மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
தொடர்ந்து, வைரஸ் பரவாமல் இருக்க ஊர் திரும்பியவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கிறார்களா என்பதை கண்காணிப்பு குழுவினர் கூர்ந்து கவனிக்க வேண்டும். சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகும் விகிதம் 22.2 சதவீதமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 2.6 சதவீதமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.