This Article is From Jun 04, 2020

நாடு முழுவதும் ஒரே நாளில் 9,034 பேருக்கு கொரோனா! 6,000ஐ கடந்தது உயிரிழப்பு!!

தற்போது 1,06,737 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 1,04,107 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 6,075 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 9,034 பேருக்கு கொரோனா! 6,000ஐ கடந்தது உயிரிழப்பு!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2,16,919 ஆக உயர்ந்துள்ளது. முன்னெப்போதையும் விட கடந்த 24 மணி நேரத்தில் 9,034 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதே போல உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 260 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 1,06,737 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 1,04,107 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 6,075 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  • நாடு முழுவதும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதமானது இன்று காலை நிலவரப்படி 47.99 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 1,04,107 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
  • மகாராஷ்டிரா மாநிலம் அதிக கொரோனா தொற்று நோயாளிகளைக் கொண்ட மாநிலங்களின் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 2,560 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 1,276 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல ஒரே நாளில்122 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலமாக மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 2,587 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 74,860 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • நான்காவது முறையாக தமிழகத்தில் ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,000ஐ கடந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையனது 25 ஆயிரத்தினை கடந்துள்ளது.
  • தேசிய தலைநகர் டெல்லியை பொறுத்த அளவில், அதிக அளவு தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியில் டெல்லி மூன்றாவது இடத்தில் உள்ளது. டெல்லியில் ஒட்டுமொத்தமாக 23,645 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லிக்கு பேருந்து, ரயில், விமானம் மூலமாக வரும் பயணிகள் கட்டாயமாக ஒரு வாரம் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என டெல்லி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
  • வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 296 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 1,830 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோருக்கு தொற்றுக்கான அறிகுறி ஏதும் இல்லையென அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
  • தெலுங்கானாவை பொறுத்த அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 129 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 7  பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த தொற்று எண்ணிக்கையானது 3,000ஐ கடந்துள்ளது. தற்போது மாநிலத்திலுள்ள மருத்துவமனைகளில் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது. 31 மருத்துவர்கள் மற்றும் மூன்று ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் தொற்றால் சமீபத்தில் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உலக நாடுகள் வரிசையில் இந்தியா தற்போது 7வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • உலக வல்லரசான அமெரிக்கா தொற்று பரவலின் மையமாக உருவெடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 919 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 1,07,099 ஆக அதிகரித்துள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
  • உலக முழுவதும் தற்போது 64,30,800 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

.