தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஒரு லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 3 ஆயிரத்தினை கடந்துள்ளது. அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளது. ஆனால், நான்காவதாக நீட்டிக்கப்பட்ட முழு முடக்க நடவடிக்கையில் தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பல மாநிலங்கள் காய் கறி சந்தைகளையும், உள்ளூர் போக்குவரத்துகளையும், சலுன் கடைகளைக்கூட பாதுகாப்பு விதிமுறைகளோடு திறந்துள்ளன. ஆனால், பள்ளி கல்லூரிகள், திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள் போன்றவற்றிற்கு மத்திய அரசு அனுமதியளிக்காததால் இவைகள் திறக்கப்படவில்லை.
இந்தியாவில் அதிகப்பட்சமாக நேற்றைய காலை நிலவரப்படி நாடு முழுவதும் ஒரே நாளில் 5,242 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டனர். இதன் மூலம் நேற்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் தொற்றால் 96,169 பேர் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டனர்.
மாநிலங்களில் பேருந்து மற்றும் இதர போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்திருந்தாலும், விமானம் மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்திற்கான தடை நீட்டிக்கப்படுவதாகவே மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே போல தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கான அனைத்து அத்தியாவசிய நடவடிக்கைகளையும் நாடு மேற்கொண்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் 23-வது ஆண்டு கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய அவர், உலக முழுவதும் பரவி உள்ள இந்த நோய் தொற்று காரணமாக எழுந்துள்ள பொருளாதார மந்தநிலையை களைய அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், இந்தியா, நாட்டில் தொற்றை எதிர்கொள்ள மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும், இந்த தொற்றுநோயிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி உலகம் முழுவதும் சிகிச்சை, நோயறிதல் மற்றும் தடுப்பூசிகள் மட்டுமே என்றும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று நெருக்கடியால் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்கும், ஆராய்வதற்கும் உலக சுகாதார அமைப்பின் 120 நாடுகளுடன் இந்தியா கை கோர்த்துள்ளது.