இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 42,533ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,373 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், இதுவரை இல்லாத அளவு 2,553 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 72 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் இரண்டாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனிடையே, நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைவாக உள்ள பகுதிகளில் பல்வேறு தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், விமானப் போக்குவரத்து, ரயில், மெட்ரோ மற்றும் மாநிலங்களுக்கிடையேயான சாலை போக்குவரத்துக்குத் தொடர்ந்து தடை நீடிக்கிறது. இதேபோல், பள்ளிகள், கல்லூரிகள் வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவையும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். கூட்டமாக கூடுவதற்கும், அரசியல், மதக் கூட்டங்களுக்கும் அனுமதியில்லை.
இன்று காலை நிலவரப்படி, குணமடைபவர்களின் எண்ணிக்கை 27.52 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, இதுவரை 11,707 பேர் குணமடைந்துள்ளனர்.
இயல்பு நிலைக்கு தலைநகர் டெல்லி தயாராகிறது என்றும், கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை அங்கு 12,974 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 548பேர் உயிரிழந்துள்ளனர். கட்டுபாடிற்குள் உள்ள பகுதிகள் தவிர்த்து, பிற பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஏ மற்றும் பி பரிவை சேர்ந்த அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் என்றும், சி மற்றும் டி பிரிவை சேர்ந்த அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பச்சை மண்டலங்களில், ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் காலை 7 மணி முதல் மாலை 7.30 மணி வரை கடைகளை திறக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிபுராவில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 14 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பிப்லாப் குமார் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக அறிவித்த ஒரு வாரத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் வேலையின்றி தவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பி செல்ல ரயில் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணத்தை காங்கிரஸ் செலுத்தும் என்று அவர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும், உயிரிழப்பு எண்ணிக்கையானது 2,47,452 ஆக அதிகரித்துள்ளது.
இந்த வருட இறுதிக்குள் கொரோனா வைரஸூக்கு எதிரான மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு கொரோனா வைரஸால் 1,450 பேர் உயிரிழந்ததுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக இதுவரை கொரோனா பாதிப்பால் 67,600 பேர் உயிரிழந்துள்ளனர்.