பீகாரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்கள் ஆவார்கள். பீகாரில் மொத்தமாக 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாட்னாவில் இருந்து 130 கி.மீ தொலைவில் உள்ள சிவான் மாவட்டத்தில் கிட்டதட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சங்கிலி தொடரானது, கடந்த மாதம் ஓமனில் இருந்து திரும்பிய நபரால் ஏற்பட்டுள்ளது.
கடந்த மார்ச்.16ம் தேதி சிவான் மாவட்டத்தில் உள்ள கிரமாத்திற்கு திரும்பிய அந்த நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது ஏப்.4ம் தேதியே தெரியவந்தது. எனினும், இதற்கிடையே, அந்த நபர் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று வந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மாநில சுகாதாரத்துறை அளித்த தகவலின் படி, அந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலானோருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கூட தெரியவில்லை. தொடர்ந்து, அந்த மாவட்டத்தில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
23 பேரில் 4 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், அவர்கள் மேலும், 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தலைமை சுகாதாரத்துறைச் செயலர் சஞ்சய் குமார் என்டிடிவியிடம் கூறியதாவது, எங்களால், பாதிக்கப்பட்டவர்களின் சங்கிலி தொடர்பைத் தெரிந்துகொள்ள முடிகிறது என்பதில் எங்களுக்கு நிம்மதி. வெளிநாட்டிலிருந்து திரும்பியவரே கொரோனா பரவலுக்கு காரணம். இதைத்தொடர்ந்து, அந்த மாவட்டத்தில் உள்ள 43 கிராமங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
இதனால், நான் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புவது என்னவென்றால், இந்த வைரஸ் நம் கண்ணுக்கு தெரியாத எதிரியாகும். அதனால், நாம் வீட்டிலே இருந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டியது முக்கியமானதாகும் என்று அவர் கூறியுள்ளார்.
பீகாரில் மொத்தமாக 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஒருவர் உயிரிழந்துள்ளார் என மாநில அரசு வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் கூறும்போது, சமீபத்தில் வெளிநாடுகளிலிருந்து திரும்பி வந்தவர்கள் அனைவரும் அறிகுறிகள் இல்லையென்றாலும், தாங்களாகவே முன்வந்து கொரோனா தொற்று பரிசோதனை செய்துகொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார். மேலும், மக்கள் தங்களது பயண பின்னணியை மறைக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,412 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் 199 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 33 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.