நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 9.68 லட்சத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில், தற்போது தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் கர்நாடகா 47,253 எண்ணிக்கையுடன் குஜராத்தை பின்னுக்குத் தள்ளி நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில், “கடவுளால் மட்டுமே நம்மைக் காப்பாற்ற உதவ முடியும்.” என கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது மகாராஷ்டிரா மாநிலம் 2.75 கொரோனா நோயாளிகளுடன் முதல் இடத்திலும், 1.51 லட்சம் நோயாளிகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்திலும், 1.16 லட்சம் நோயாளிகளுடன் டெல்லி மூன்றாவது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியான சூழ்நிலையில், “நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் ஆளும் கட்சியின் உறுப்பினரோ, எதிர்க்கட்சியின் உறுப்பினரோ, ஏழையோ, பணக்காரனோ இப்படி எதையும் கொரோனா கணக்கில் கொள்வதில்லை.” என 48 வயதான ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார். மேலும், “தற்போதைய இந்த எண்ணிக்கையானது அடுத்த இரண்டு மாதங்களுக்கு அதிகரிக்கக்கூடும். இம்மாதிரியான எண்ணிக்கை அதிகரிப்புக்கு அரசின் போதுமான தடுப்பு நடவடிக்கைகள் அல்லது அமைச்சர்கள்தான் காரணம் என நாம் எளிதாக விமர்சனம் செய்துவிட முடியும். ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையிலிருந்து வெகு தொலைவில் உள்ளன. கொரோனாவிலிருந்து கடவுளால் மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும்.” என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சரின் இந்த கருத்திற்கு, “எடியூரப்பாவின் பாஜக அரசால் தொற்றுநோயைச் சமாளிக்க முடியவில்லையா? இந்த அரசாங்கத்தின் திறமையின்மை குடிமக்களை கடவுளின் கருணைக்கு விட்டுவிட்டது.” என கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான டிகே சிவக்குமார் டிவிட்டரில் விமர்சித்துள்ளார்.
இப்படியான எதிர்க்கருத்துகளுக்கு பின்னர், “மக்களின் ஒத்துழைப்பைத் தவிர, கடவுளும் எங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று நான் கூறியிருந்தேன், ஆனால் சில ஊடகங்கள் கருத்தை மாற்றி தெரிவித்துள்ளன.” மேலும், “அவ்வாறு சொல்வதற்குப் பின்னால் எனது நோக்கம் என்னவென்றால், ஒரு தடுப்பூசி வரும் வரை, கடவுளால் மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும். அதை தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது.” என சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் தெரிவித்தாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் ஐந்து மாநிலங்களில் கர்நாடகாவும் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 3,176 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். அதே போல 86 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையானது 928 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய அளவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 32,000க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.