இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்புக்கு 9 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று மாலை 30 மாநிலங்கள் அதிரடியாக ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 75 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, ஒட்டுமொத்தமாக இந்தியாவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 471ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் மட்டும் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர், மற்றொருவர் இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு உள்நாட்டு விமானங்களுக்கும் தடை விதித்து கடுமையாக கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அத்தோடு, இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது.
இதனிடையே, கொல்கத்தாவில், தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த 57 வயது நபருக்கு எந்த ஒரு வெளிநாட்டுப் பயண பின்னணியும் இல்லாதது, வைரஸ் பரவும் சங்கிலி குறித்து கவலை எழுப்பியுள்ளது.
548 மாவட்டங்களை உள்ளடக்கிய 30 மாநிலங்கள் முழுமையாக முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் மட்டும் குறிப்பிட்ட பகுதிகளுக்குத் தடையை அறிவித்துள்ளன. இதில், கொரோனா உறுதி செய்யப்பட்ட 80 மாவட்டங்கள் உள்ளடங்கும்.
மிசோரம், சிக்கிம் ஆகிய இரு மாநிலங்கள் மட்டுமே இன்னும் தடையுத்தரவை அமல்படுத்தவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் மட்டும் புதிதாக 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்தமாகப் பாதிப்பு எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது. இதில், 41 பேர் வெளிநாட்டவர்கள் ஆவார்கள். மேலும், இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத், பீகார், கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்குவங்கம் மற்றும் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஊரடங்கு உத்தரவைப் பலரும் முக்கியமானதாகக் கருதவில்லை என்று வருத்தம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசு பிறப்பிக்கும் உத்தரவுகள் முறைப்படி பின்பற்றப்படுகிறதா என்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், கட்டுப்பாடுகளைப் பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக சர்வதேச விமானங்கள், பயணிகள் ரயில்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் உள்ளிட்டவை முடக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று உள்நாட்டு விமானச் சேவைக்கும் மத்திய அரசு தடை விதித்தது. நேற்றிரவு இரவு 11.59 மணிக்கு முன்னதாக விமான நிறுவனங்கள் தங்கள் இலக்கை நோக்கிச் செல்ல நடவடிக்கைகளைத் திட்டமிட வேண்டும் என்று அரசு தெரிவித்தது. தொடர்ந்து சரக்கு விமானங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக விலகலை அமல்படுத்தும் முயற்சியில் மெட்ரோ சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன, இதுவே வைரஸைத் தடுப்பதற்கான ஒரே வழி என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்புவதற்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, எந்தவொரு தகவலும் உண்மைகளை அறியாமல் பரப்புவதற்கு எந்தவொரு நபரோ, நிறுவனமோ அல்லது அமைப்போ அச்சு, மின்னணு அல்லது சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை எப்போது அரசு அறிவிக்கும் என்பதைக் காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள விரும்பிய நிலையில் அரசு இரண்டு மசோதாக்களை அறிமுகப்படுத்தியது.