மலேரியாவுக்கு எதிரான மருந்தை கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தலாம் என்று தெரியவந்ததை தொடர்ந்து, உலக நாடுகள் இந்தியாவிடம் மருந்து கோரி கடுமையான அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளன. இந்த விவகாரத்தில், உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்வதற்கு போதுமான இருப்பு இருக்கும் பட்சத்தில் மருந்துகளை ஏற்றுமதி செய்யலாமா என்பது குறித்து இன்று முடிவு செய்யப்பட உள்ளது.
முன்னதாக, கடந்த மாதம் மலேரியாவுக்கு எதிராக கொடுக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தலாம் என வல்லுநர்கள் தெரிவித்ததை தொடர்ந்து, இந்தியா அதன் ஏற்றுமதிக்கு தடைவிதித்தது.
கொரோனா வைரஸ் தொற்று நோயானது, சில நேரங்களில் கொடிய சுவாச கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது. இந்த நோயக்கு தற்போது வரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகளோ அல்லது தடுப்பு மருந்துகளோ எதுவும் இல்லை.
மலேரியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தானது, கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாமா என்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மருந்துகளில் ஒன்றாகும். உலகளவில் இந்தியாவே இந்த மருந்தை மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்கிறது.
இதையடுத்து, கடந்த சனிக்கிழமையன்று, அமெரிக்காவில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால், இந்தியா அதனை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையன்று, மலேரியா எதிர்ப்பு மருந்துக்கான உள்நாட்டு தேவையை மதிப்பிடுவதற்காக அமைச்சரவை கூட்டம் நடந்தது, தொடர்ந்து, திங்களன்று மீண்டும் இது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் என்டிடிவிக்கு அளித்த தகவலில், மொத்த உள்நாட்டு தேவைக்கு மேல், கூடுதலாக 25 சதவீதம் கையிருப்பு வைத்து கொண்டு, அதற்கு மேல், இருக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், இந்தியாவுடனான அவர்களின் உறவுகளின் அடிப்படையில் இந்த மருந்து ஏற்றுமதி செய்யப்படும் என்று அந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
பிரேசில், ஸ்பெயின் போன்ற 6 முதல் 7 நாடுகளிலிருந்து மருந்து கேட்டு கோரிக்கை வந்துள்ளன. இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து, எந்த நாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை வெளியுரவுத்துறை அமைச்சகம் முடிவு செய்யும் என்றும் அந்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் முக்கிய அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ள கூட்டத்தில் ஏற்றமதி செய்வது தொடர்பான முறையான முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.