உலக நாடுகளின் வல்லரசு எனக் கருதப்படும் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தினை கடந்துள்ளது. 38 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தற்போது வரை கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சீனாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக கொரோனா வைரஸ் தொடங்கியதாகக் கருதப்படும் சீனாவின் வூகான் மாகாணத்தில் இறப்பு எண்ணிக்கை 1,300 புதியதாக சேர்க்கப்பட்டது. இதனால் சீனாவின் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கையானது 4,600க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை வெளிவந்த இரு தினங்களுக்குப் பிறகு ட்ரம்ப் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்திருக்கிறார்.
சனிக்கிழமை ட்ரம்ப், “கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் அமெரிக்கா முன்னணியில் இல்லை. சீனாதான் முன்னணியில் உள்ளது. நாம் அதன் எண்ணிக்கையை இன்னமும் நெருங்கவில்லை” என குற்றம் சாட்டியுள்ளார்.
இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி மற்றும் ஸ்பெயின் என மிகவும் வளர்ந்த சுகாதார அமைப்புகள் கொண்ட நாடுகள் அதிக இறப்பு விகிதங்களைக் கொண்டிருந்தபோது, சீனாவில் இறப்பு விகிதம் O.33 ஆக இருந்ததாக ட்ரம்ப் குறிப்பிடுகிறார்.
சீனா வெளியிட்டுள்ள இறப்பு எண்ணிக்கையானது உண்மையில் அதைவிட அதிகம் என ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். “உங்களுக்கும் எனக்கும் உண்மையான எண்ணிக்கை தெரியும். நமக்குத் தெரியும் என்பதை அவர்கள் அறிவார்கள். ஆனால் ஏன் உண்மையான புள்ளிவிவரத்தினை வெளியிட அவர்கள் மறுக்கிறார்கள்? அதற்கான காரணத்தை அவர்கள் விளக்க வேண்டும். நான் ஒரு நாள் அதை விளக்குவேன்.” என ட்ரம்ப் கூறியுள்ளார்.
தனிநபர் அடிப்படையில், அமெரிக்காவில் இறப்பு விகிதம் மேற்கு ஐரோப்பாவின் மற்ற நாடுகளை விட மிகக் குறைவு என ட்ரம்ப் விளக்கியுள்ளார்.
OMB தகவலின்படி 2020க்கான அமெரிக்காவின் பட்ஜெட் முன்மாதிரியில், மொத்த பட்ஜெட்டில் 57 சதவிகிதம் பாதுகாப்புத் துறைக்காகவும், 7 சதவிகித நிதி சுகாதாரத்திற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.