சர்வதேச அளவில் கொரோனா தொற்று மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது அமெரிக்கா, உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியப் பிரதமர் மோடியிடம் கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தினை ஏற்றுமதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து மத்திய அரசு, அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தினை ஏற்றுமதி செய்வதை உறுதி செய்தது.
இதையடுத்து டிரம்ப், “அசாதாரண நேரங்களில் நண்பர்களிடையே இன்னும் நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் குறித்த முடிவுக்கு இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் நன்றி. இந்த உதவி மறக்கப்பட மாட்டாது. உறுதியான தலைமை கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு மிக்க நன்றி. இந்தப் போராட்டத்தில் நீங்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, மொத்த மனித குலத்திற்கும் உதவி செய்துள்ளீர்கள்,” என அமெரிக்க ஜனாதிபதி ட்வீட் செய்துள்ளார்.
முன்னதாக மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புக் கொள்ளாவிட்டால் "பதிலடி கொடுக்கப்படும்” என்று டிரம்ப் எச்சரித்திருந்தார். மத்திய அரசு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தினை ஏற்றுமதி செய்வதைச் சமீபத்தில் தடை செய்திருந்தது. இந்த நிலையில் அமெரிக்க மற்றும் இதர நாடுகளிலிருந்து அதிகரித்து வரும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து தேவைக்கான கோரிக்கை காரணமாக கொரோனா தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு, அதை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது.
இந்நிலையில் டிரம்ப்பின் நன்றி தெரிவிக்கும் ட்வீட்டுக்குப் பிரதமர் மோடி, “மனிதக்குலம் கோவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராட இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும். நாம் இந்தப் போராட்டத்தை ஒன்றிணைந்து வெல்வோம்,” இன்று ரிப்ளை கொடுத்துள்ளார்.
உலகளவில் 70 சதவிகித ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து உற்பத்தி இந்தியாவில்தான் செய்யப்படுகிறது. இந்த மருந்து கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படலாம் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் ஐ.சி.எம்.ஆர், இந்த மருந்தை கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் சுகாதாரத் துறை ஊழியர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்தது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 5,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 166 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் 4 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
(With inputs from PTI)
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|